புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளரக்ளிடம் கூறியதாவது:
மக்களின் அத்தியாவசிய உணவ பொருட்களான மீன் இறைச்சி, கறி இறைச்சி, பால் மற்றம் பழம் வகைகளில் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதால் மக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாக்கப்பட்டு மக்களின் நலன் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
மேற்கண்ட வகையிலான அத்தியாவசிய உணவு பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்காகவும், கூடுதல் சுவையூட்டவும், வெகு விரைவில் காய்களை ஒரே சீராக பழங்களாக மாற்றவும் பல்வேறு ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன.
வெளி மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. அந்த மீன்கள் பத்து நாட்களுக்கு மேலாக கெடாமல் இருப்பதற்காக பார்மலின் என்ற ரசாயன பொருள் கலக்கப்படுகிறது. இந்த ரசாயனம் கலந்த மீன்கள் உண்ணுவதால் தோல், கண்கள் பாதிக்கப்படுவதுடன் வயிறு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு மற்றும் மனித செல்களில் புகுந்து புற்று நோயை உண்டாக்கும் அபாயம் உள்ளது என தேசிய நச்சு இயல் துறை பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே போன்று மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேற பழ வகைகளில் உடனடியாக ஒரே நேரத்தில் பழக்க வைக்கவும், பழுத்த பழங்கள் கெடாமல் இருக்கவும், சுவையை அதிகரிக்கவும் எத்தஃபோன் மற்றும் எத்திலீன் டை குளோரைடு போன்ற ரசயான பொருட்கள் கலக்கப்படுகின்றன. அதே போன்று ஆப்பிள் பழம் வெகு நாட்கள் கெடாமல் இருப்பதற்கு பழத்தின் மீது மெழுகு கலக்கப்படுகின்றது. இதுபோன்று எத்தஃபோன் மற்றும் எத்திலீன் ஆகிய ரசாயன பொருட்கள் பழங்கள் மூலம் மனித உடலுக்கு செல்லும் போது மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பல்வேறு நோய்கள் உருவாகிறது.
இந்த ரசாயன பொருட்களினால் கண்பார்வை மங்குதல், மூளை சுருங்குதல், குடல் நோய்கள், கல்லீரல் பாதிப்பு, கிட்னி பாதிப்பு, வயிற்று உபாதைகள் ஏற்படும் என நச்சு இயல் துறை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே போன்று நாம் தினசரி அருந்தும் பாலில் பால் கெடாமல் இருப்பதற்காகவும், பாலின் அடர்த்தி அதிக அளவில் இருப்பதற்காகவும், பல ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன. யூரியா, சலவை சோப்பு, தூள் சோப்பு, போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்சைடு, ஸ்டார்ச், காஸ்டிக் சோடா, சோடியம் கார்பனேட், சோடியம் பைகார்பனேட் போன்ற ரசாயன பொருட்களை பாலில் கலக்கப்படுகின்றன. இவ்வாறு கலக்கப்படும் ரசாயன பொருட்களால் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு, வாந்தி, தலைவலி, பெரியவர்களுக்கு சிறுநீரக கோளாறுகளும் மெல்ல மெல்ல கண்ணுக்கு தெரியாத உடல் உறுப்புகள் வீணாகி மரணம் கூட ஏற்படலாம் என நச்சு இயல் துறை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது புதுச்சேரி அரசில் வேளாண்துறை அமைச்சராக உள்ள மாண்புமிகு தேனீ.ஜெயக்குமார் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலில் மண்புழு அறைத்து கலக்கப்படுவதாக சட்டமன்றத்திலேயே பகீரங்கமாக குற்றம் சுமத்தினார்.
மேற்கூறி கலப்படங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்ற அனைவராலும் கலக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட ஒரு சிலர் தங்களது பேராசை பிடித்த வருமான ஆசையினால் மனித உயிர்களை பற்றி கவலைப்படாமல் தாங்கள் விற்பனை செய்யும் உணவு பொருட்களில் ரசாயனத்தை தெரிந்தே கலக்கின்றனர்.
இதுபோன்ற தவறுகளை ஆய்வு செய்வதற்கோ, அல்லது பரிசோதனை செய்வதற்கோ புதுச்சேரி அரசில் சம்பந்தப்பட்ட துறைகள் ஒன்றிரண்டு அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். அந்த அதிகாரிகளும் வாங்கும் சம்பளத்திற்கு அலுவலகத்திலேயே இருந்துவிட்டு எங்கும் பரிசோதனை நடத்தாமல் உள்ளனர்.
குறிப்பாக தற்போது பிராய்லர் கோழி மற்றும் அந்த பிராய்லர் இறைச்சி மூலம் செய்யப்படும் பாஸ்ட் புட் என்ற துரித உணவுகளை உண்ணுவதால் கடந்த 2 தினங்களில் மட்டும் பல நூற்றுக்கு மேற்பட்ட மக்களுக்கு டையேரியா என்ற வாந்தியும், பேதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் உள்ளிருப்பு நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்களுடைய உடல் நலனுக்கு பாதிப்பு இல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால் அந்த கடமையில் இருந்து சம்பந்தபட்ட அதிகாரிகள் முழுமையாக தவறியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்றாகும். சுகாதாரத்துறையை தன் பொருப்பில் வைத்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இது சம்பந்தமாக உரிய தடுப்பு நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், சுகாதாரத்துறை இயக்குநர், மாசு கட்டுப்பாட்டு அதிகாரி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடைய கூட்டத்தினை கூட்டி ரசாயன பொருட்கள் கலந்த உணவ பொருட்கள் புதுச்சேரியில் விற்பனை செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில மகளிர் அணிசெயலாளர் விமலா ஸ்ரீ,மாநில மகளிர் அணி தலைவி தரணிதேவி, மாநில மகளிர் அணி துணைத் தலைவி செல்வராணி,மாநில மகளிர் அணி துணை செயலாளர்கள் பவானி, மகேஸ்வரி,பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி,வில்லியனூர் சட்டமன்றதொகுதி செயலாளர் பிரதீப்குமார்,வில்லியனூர் சட்டமன்ற தொகுதி கழக அவைத்தலைவர் இலியாஸ் (எ ) பஜீலுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.