வேலையை நிரந்தரம் செய்தால் தான் பகுதிநேர ஆசிரியர்கள் பிரச்சனைகள் நிரந்தரமாக தீரும் :
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வலியுறுத்தல் :
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி ஓவியம் தையல் இசை கணினி தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்க்கைகல்வி ஆகிய கல்வி இணை செயல்பாடு பாடங்களை நடத்த 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் மாதம் ரூபாய் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.
எஸ்எஸ்ஏ என்ற அனைவருக்கும் கல்வி இயக்கம் தற்போது சமக்ரா சிக்சா அதாவது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலமாக ரூபாய் 10 ஆயிரம் தொகுப்பூதியமும், தமிழ்நாடு மாநில அரசு நிதியில் இருந்து ரூபாய் 2,500 உதவித்தொகையாக என இரண்டு பரிவர்த்தனைகளில் இந்த ரூபாய் 12,500 வழங்கப்படுகிறது.
புதிய கல்வி கொள்கை, பிஎம்ஸ்ரீ பள்ளிகள் போன்ற காரணங்களால் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என தமிழக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் மத்திய அரசு பங்களிப்பு நிதியையும் தமிழ்நாடு அரசே கூடுதலாக வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்த 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை மே மாதம் தவிர்த்து ஆண்டின் 11 மாதங்களுக்கு தற்போதுள்ள 11,700 பகுதிநேர ஆசிரியர்களுக்கு 160 கோடி நிதியை தமிழ்நாடு அரசே வழங்குகிறது.
காலமுறை சம்பளம் அதாவது ரூபாய் 20,600 அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி உயர்வு என்ற ஊதியம் நிர்ணயித்து வழங்க மொத்தம் 450 கோடி ஆகும்.
காலமுறை சம்பளம் வழங்க அரசுக்கு மேலும் 300 கோடி போதும்.
காலமுறை சம்பளம் வழங்கினால் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்கள் இந்த வேலைக்கு சேர்ந்த 2012 ஆம் ஆண்டு முதல் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து சந்தித்து வருகின்ற மே மாதம் சம்பளம், மருத்துவ காப்பீடு, போனஸ், வருங்கால வைப்பு நிதி உள்பட அரசு சலுகைகள் கிடைக்காத நிலை ஒழியும்.
உடற்கல்வி ஓவியம் தையல் இசை கணினி பாடங்களில் காலமுறை சம்பளத்தில் பணி புரிகின்ற சிறப்பாசிரியர்களும், தற்போது 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிபுரியகின்ற பகுதிநேர ஆசிரியர்களும் ஒரே கல்வித்தகுதி கொண்டவர்கள்.
எனவே சம வேலை, சம ஊதியம் வழங்கி, இந்த வேறுபாட்டை கலைய வேண்டும்.
திமுகவும் தேர்தல் அறிக்கையில் பணி நிரந்தரம் செய்வதாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2021 மற்றும் 2016 என இரண்டு தேர்தலில் வாக்குறுதி கொடுத்துள்ளது.
பணி நிரந்தரமே தீர்வு என பகுதிநேர ஆசிரியர்களும் கோரிக்கை மனு கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பணி நிரந்தரம் குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என பள்ளிக்கல்வி அமைச்சர் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கை அன்று தெரிவித்துள்ளார்.
பணி நிரந்தரம் செய்து விட்டால் தொகுப்பூதியம் கைவிடப்பட்டு காலமுறை சம்பளம் கிடைத்து அரசு சலுகைகளும் கிடைத்து விடும்.
எனவே முதல்வர் அரசாணை வெளியிட்டு பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
—
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
Cell: 9487257203