வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை கலெக்டர் மோகனச்சந்திரன் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் கோவிந்தகுடி தனியார் திருமண மண்டபத்தில் கோவிந்தகுடி, ஆவூர், வடக்கு பட்டம், தெற்கு பட்டம், 44. ரகுநாதபுரம் ஆகிய ஜந்து ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் பார்வையிட்டு, வருவாய்த் துறையின் சார்பில் மூன்று பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நான்கு பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையினையும், ஒரு பயனாளிக்கு மனு அளித்த உடனடியாக மின்னணு குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் பெயர் திருத்தம் செய்யப்பட்டு, குடும்ப அட்டையில் உறுப்பினர் சேர்க்கையினையும் செய்து வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ஜந்து பயனாளிகளுக்கு முதலமைச்சரின் வீடு மறு கட்டுமான திட்ட ஆணையினையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மூன்று பயனாளிகளுக்கு உயிர் உரம் மற்றும் பயிர் விதைத்தொகுப்புகளும், மூன்று பயனாளிகளுக்கு கை டிராக்டர்களும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட் சார்பில் ஆறு பயனாளிகளுக்கு வங்கி கடனுதவியும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, உதவி கலெக்டர் சவுமியா, தாசில்தார் ஓம் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, சிவக்குமார், ஒன்றிய திமுக செயலாளர் வீ. அன்பரசன், நகர செயலாளர் பா. சிவநேசன் மற்றும் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.