அறந்தாங்கியில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் திசைகள் விழாவிற்கு பங்கேற்க நானும் சென்றிருந்தேன்.
விழாவில் பேசிய திசைகளின் தலைவர் தட்சிணாமூர்த்தி அவர்களது உரை அனைவரையும் மிகவும் ஈர்த்தது.
மாமேதை மார்க்ஸ் பற்றியும், அறிவியல் பற்றியும், விஞ்ஞானம் பற்றியும் இன்னும் என்னென்னமோ சொல்லிக் கொண்டே போகலாம். இலக்கியம் தொடர்பாகவும், மருத்துவம் தொடர்பாக பல்வேறு தகவல்களை மிக அருமையாகப் பேசினார்.
விருதுகள் பெரியார்,அம்பேத்கார்,மாமேதை மார்க்ஸ், காமராஜர் பெயரில் விருதுகள் ஏன் வழங்கப்படுகிறது என்கிற விவரங்களையும் கூறினார்.
சீண்டுவார் இல்லாமல், தேடுவார் இல்லாமல் இருக்கக் கூடிய அரசுப் பள்ளி மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை பாராட்டி வாழ்க்கையில் வெற்றியாளராக மாற்ற திசைகள் அமைப்பு எடுத்து வரும் பல்வேறு தகவல்களையும் எடுத்துரைத்தார்
அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்படும் விதத்தையும், 2023 ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் முதல்வர் குமார் அவர்கள் கல்லூரியின் பெரும்பான்மையன வகுப்பறைகளை குளிரூட்டப்பட்டதாகவும் மற்றும் பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்தி படிக்கும் மாணவர்களுக்கு அனைவருக்கும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருவதாக தெரிவித்தார்.
இவையெல்லாம் எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. கல்லுரி முதல்வர் திரு.குமார் அவர்களிடம் சில நிமிடங்கள் பேசினேன். மிக இயல்பாக நீண்ட நாள் பழகியவர் போல் பேசினார். மகிழ்ச்சி.
விருது வழங்குவதற்கான காரணத்தை தலைவர் எடுத்து கூறும்போது திசைகளின் விருதுகளை வழங்குவதற்கு தேடும் படலம் எவ்வளவு கடினமானது என்பதை எனக்கு உணர்த்தியது. அன்னாரின் பேச்சு பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது
நீண்ட நெடிய ஆழமான வாசிப்பு திறன் இருந்தால் மட்டுமே இதுபோன்ற பேச முடியும் என்பது உண்மை. ஏனெனில் காரல்மார்க்சையும் , பெரியாரையும், அண்ணாவையும், காமராஜரையும் ஒருங்கிணைத்து அனைத்து தகவலையும் அங்கே எடுத்துச் சொல்வது என்பது கடினமான காரியம். எந்த குறிப்பும் இல்லாமல் மிக அழகாக தலைவர் அவர்கள் பேசினார்கள்.
பெரியார் விருது பெற்ற தோழர் கண்ணம்மா அவர்கள் உண்மையிலேயே எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இளம் வயதில் தன் குடும்பத்தார்களை விட்டு கலப்புத் திருமணம் செய்து அதன் மூலமாக பல்வேறு போராட்டங்களை சந்தித்து வாழ்க்கையில் வெற்றி பெற்றார் என்பதை அறிந்த பொழுது கண்ணில் கண்ணீர் வழிந்தது.
இந்த மேடையில் தான் நான் முதன் முதலாக விருது வாங்கினேன் என்று தோழர் கூறியபோது இன்னும் எனக்கு அந்த வார்த்தைகள் மனதில் நீங்காமல் நிற்கின்றது.
தோழர் கண்ணம்மா அவர்களின் நீண்ட போராட்டம் குறித்து தோழர் கவிவர்மன் கூறும் பொழுது ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது.
. பத்திரிகையாளர்களுடன் பல்வேறு இடங்களுக்கும் தோழர் கண்ணம்மா சென்றதும், அது பன்னாட்டு தளங்களில் வெளியானதை கூற கேட்கும்போது ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் இருந்தது.
புதுக்கோட்டையில் குற்றவியல் அரசு வழக்கறிஞராக பணியாற்றும் வெங்கடேசன் அவர்கள் ஏன் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கவிதை பித்தன் அவர்கள் கூறியது மிகவும் அருமையான விஷயம்.
ஜாதி அல்லது என்ன ஆளுக என்று கேட்பதே இன்று சமுதாயத்தில் முதல் கேள்வியாக இருக்கிறது. கூகுளில் சென்று அவர் என்ன ஜாதி என்று தேடுவது பெரும்பான்மையோர் தேடுதல் பொருளாகவும் இருக்கின்றது.
இவற்றிற்கு இடையில் பல ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வரும் வெங்கடேசன் அவர்களது ஜாதியை நான் கேட்கவில்லை. ஜாதி பற்றி அவரும் என்னிடம் எதுவும் கூறியதும் இல்லை.
ஜாதி அடையாளமாக வெங்கடேசன் இருந்ததும் இல்லை என்று கவிதைப்பித்தன் கூறும்பொழுது அதற்காகவே அவருக்கு விருது கொடுக்கலாம், எனக்கும் விருது கொடுக்கலாம் என்று கூறினார்.பொருத்தமான தகவல்.
வக்கீல் வெங்கடேசன் அவர்களை ஒருமுறை ட்ரெய்னில் சந்தித்து இரவு நீண்ட நேரம் அரசியல் தொடர்பாகவும், பல்வேறு சமூக நிகழ்வுகள் தொடர்பாகவும் பேசிக்கொண்டு வந்தேன். அப்பொழுது அவர் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். திசைகளின் மூலமாக பழகியதால் தான் தங்களிடம் பேசுகிறேன் என்றும் அவரிடம் தெரிவித்திருந்தேன்.
கவிதை பித்தன் அவர்கள் பேசும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அனைவரும் விருது தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும்போது அவரோ தனது மனைவி தான் இந்த விருது பெறுவதற்கான காரணம் என்று கூறினார். அதற்கான காரணங்களையும் மிக அழகாக அடுக்கு மொழியில் அடுக்கினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
மனைவியினுடைய தொடர் முயற்சிகளும், அவருடைய புரிதலும் தான் தன்னுடைய இந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் கூறியது உண்மையிலேயே 100% பொருத்தமானது.
பொதுவாக மேடையில் பலரும் தங்களது குடும்பத்தில் உள்ள மனைவியின் உந்துதலை வெளியில் எடுத்து சொல்ல மாட்டார்கள். ஆனால் மிகத் இயல்பாக, மிக அழகாக அந்த விஷயத்தை எடுத்துக் கூறினார்.
அவருடைய காதல் தொடர்பான தகவலை கூறும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
தொடர்ந்து பல நாட்களாக கடிதம் எழுதியும் பதில் வராமல் பௌர்ணமி போன்று ஒரு கடிதம் வேண்டும் என்று அவர் எழுதிய பொழுது அவருடைய காதலி நேராக வீட்டுக்கு வந்தது குறித்து அவர் கூறியது மிகுந்த மகிழ்வாக இருந்தது. அவரையே அவர் திருமணம் செய்து உள்ளதை அறிந்த பொழுது இன்னும் கூடுதல் மகிழ்வாக இருந்தது.
விருது பெற்ற கவிதை பித்தன் அவர்கள் பேசும்பொழுது திசைகளின் தலைவரை இனி வரும் காலங்களில் இறுதியாக பேச சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
ஏனெனில் திசைகளின் தலைவர் தட்சிணாமூர்த்தி பேசும்பொழுது பல்வேறு தகவல்களை உள்ளடக்கி கூறியதாக வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு தான் ஏன் வந்தேன் என்பதையும் அவர் மிகவும் தெளிவாக விளக்கினார். அந்த விதம் மிகவும் நன்றாக இருந்தது.
தன்னிடம் தன்விவரக் குறிப்பு தலைவர் கேட்டதாகவும், தான் அதை அனுப்பவில்லை என்றும் கூறினார். ஏனென்றால் தான் எந்த சாதனையும் செய்யவில்லை என்றுதான் எண்ணுவதாக கூறினார்.
அதுவே மிகவும் பாராட்டத்தக்கது தான். இந்த, இந்த விருதுகளை பெற்று இருந்தோம். நான் இதெல்லாம் செய்திருந்தேன் என்று கூறுவதைவிட தான் எந்த சாதனையும் செய்யவில்லை, சாதனை செய்ததாக அளவுக்கு நான் இன்னும் செல்லவில்லை என்றெல்லாம் மிகத் தெளிவாக குறிப்பிட்டார்.
இதுதான் தன்னடக்கம் என்பது. இதுபோன்று உள்ளவர்களை தான் விருதுகள் தேடி வரும். அந்த வகையில் அன்னாரின் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவையாக இருந்தது. பொருத்தமானதாகவும் இருந்தது.
கவிதை பித்தன் அவர்கள் பேசும்பொழுது அனைவரையும் பாராட்டி பேசினார். என்னென்ன காரணத்திற்காக யார் யாரெல்லாம் இங்கே வந்து இருக்கிறார்கள் என்பதையும் விளக்கமாகக் கூறினார். இதை அவர் கூறிய அனைத்துமே பொருத்தமாக இருந்தது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, சமுதாய சீர்திருத்தத்திற்காகவும் திசைகள் அமைப்பு எடுத்துவரும் நிகழ்வுகளில் பாராட்டத்தக்க விஷயம். மேடையே இல்லாமல் அனைவரையும் சமமாக கருதி இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்தது சூப்பராக இருப்பதாக தெரிவித்தார்.
இதற்காக உழைத்த திசைகள் குழுவினர் அனைவரும் வெளியில் சத்தமில்லாமல் நின்று கொண்டிருப்பது மிகவும் பெருமை மிக்கதாகவும் தெரிவித்தார்.
எப்படி இருந்தாலும் கவிதைப்பித்தன் கூறிய தகவல்கள் அனைத்தும் மனதை விட்டு நீங்காத எண்ணம் என்னுள்ளே தொடர்ந்து இருந்து வருகின்றது.
கல்லூரி முதல்வர் அவர்கள் பேசும்பொழுது, தனக்கு விருது கொடுத்தது மகிழ்ச்சி அளித்ததோடு, தன் கல்லூரியிலும் மாணவர்களை சேருங்கள் என்று அவர் கூறியது தான் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய் இருந்தது.
சமூகநல தாசில்தாராக பணியாற்றும் ஜபருல்லா அவர்கள் கல்லூரி முதல்வர் குறித்து கூறும்போது பல நல்ல விஷயங்களை எடுத்துக் கூறினார்.
அறந்தாங்கி அருகே இருக்கக்கூடிய கரிசல்காடு என்னும் சிறிய கிராமத்தில் அரசுப்பள்ளியில் படித்து தற்போது அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக இருக்கும் குமார் அவர்கள் பல நல்ல விஷயங்களை செய்துள்ளார்.
குறிப்பாக படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த கணினி நிறுவனம் நடத்தும் கல்லூரியை விட மிக அழகாக குக்கிராமத்திலிருந்து படித்து வந்து, கிராமத்தில் இருக்கக்கூடிய ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியை உலகத் தரத்திற்கு உயர்த்தி உள்ளார் என்று எண்ணும் பொழுது மிகுந்த மகிழ்வாக இருக்கின்றது.
தோழர் கண்ணம்மா அவர்களுக்கு விருது பெறுவது இந்த மேடை தான் முதல் மேடை என்று கூறும்போது நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் விருதினை முதல்முறையாக பெரும்பொழுது என்ன சந்தோஷத்தில் இருப்பார்கள் என்று நான் எண்ணிப் பார்த்தேன். எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது.
அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை தேடிப்பிடித்து விருது வழங்குவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதனையும் தொடர்ந்து 20 ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்த்துவது என்பது மிகமிக பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும்.
தோழர் தட்சணாமூர்த்தி அவர்கள் மிக இயல்பாக மாணவர்களிடம் பேசுகையில், ஒரு வார்த்தை, ஒரு வாக்கியம் தாங்கள் கேட்கும் பொழுது உங்கள் வாழ்க்கையே மாற்றம் ஏற்படும்.
எனவே பரிசு பெற்ற உடன் சென்று விடாதீர்கள். காத்திருங்கள். அந்த வார்த்தை உங்களுக்கு இன்று கிடைக்கலாம் , கிடைத்தால் வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.
உண்மைதான் பல நேரங்களில் ஒரு வார்த்தையோ, ஒரு வாக்கியமோ நாம் கேட்கும் போது அது மிகப்பெரிய உந்துதலை நம் மனதிற்குள் ஏற்படுத்திவிடும். அந்த விஷயத்தில் தலைவரின் கருத்து மிகவும் அருமையாக இருந்தது.
விழாவிற்கு தலைமை தாங்கி பேசிய மருத்துவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், இரண்டு இட்லி சாப்பிடுங்கள் என்று கூறினால் சாப்பாட்டிற்கு முன்பாகவா, பின்பாகவா என்று என்னிடம் கேட்கிறார்கள்.
சாப்பாட்டில் கவனம் செலுத்தி வாயை கட்டுப்படுத்தினால் மருத்துவரை பார்ப்பதையே தவிர்த்து விடலாம். என்று இயல்பாக உணவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
வாயை சரியாக வைத்துக்கொண்டு சாப்பிடுபவர்கள் சர்க்கரை வியாதி என்று மருத்துவரை பார்க்கவேண்டிய தேவை இல்லை.
தானும் தேபிரிட்டோ பள்ளியில் படித்து பல ஆண்டுகளாக பலரும் சந்திக்கலாம் என்று எண்ணம்போது நாட்கள் கடந்து கொண்டே செல்வதாக தெரிவித்தார்.
மேலும் போதை பழக்கத்துக்கு எதிராக திசைகள் அமைப்பும் பல முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திசைகள் அமைப்பின் மூலமாக சில ஆண்டுகளுக்கு முன்பு விருது பெற்றுள்ளேன் என்று எண்ணும்பொழுது எனக்கும் மிகவும் மகிழ்வாக இருந்தது. திசைகள் அமைப்பை இன்னும் பல இடங்களுக்கும் நாம் கொண்டு செல்லவேண்டும்..
கவிதைப்பித்தன் அவர்கள் கூறியது போல் பல மாவட்டங்களிலும் இந்த திசைகள் அமைப்பு போன்று செயல்பட வேண்டும் என்று கூறினார்.
உண்மைதான் தோழர்களே இதுபோன்று ஒரு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பது என்பது பாராட்ட வேண்டிய விஷயம்.
அரசு பள்ளிகளை, கல்லுரிகளை பாதுகாப்போம்! என்று அடிப்படையில் இது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதற்காக திசைகள் அவருக்கு காமராஜர் விருது வழங்குவது மிகவும் அருமையான ஒரு நிகழ்வு ஆகும்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திசைகளின் பொருளாளர் முபாரக் அவர்கள் மிக அருமையாக செய்திருந்தார்.
நான் மதியம் 12 மணிக்கு வந்தபொழுது அவர்தான் என்னை அழைத்துச் சென்று மண்டபத்தில் அமர வைத்தார். மீண்டும் மதிய உணவும் ஏற்பாடு செய்திருந்தார்.
பெரும்பாலான நிகழ்வுகளை முபாரக் மிக அருமையான திட்டமிடலுடன் செய்தது பாராட்டத்தக்கது. தலைவர் எவ்வாறு யோசிக்கிறார்,
தலைவரின் முகபாவனை, யோசிக்கும்போதே முபாரக் அவர்கள் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வந்து விடுகிறார் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான குறிப்பு.
இன்னும் பல திசைகள் தோழர்கள் குறிப்பாக பாஸ்கர் ஆசிரியர், மேகலா ஆசிரியை ஆகியோரையும் நிச்சயம் குறிப்பிட வேண்டும்.
அவர்கள் இருவரும் இத்துணை அரசு பள்ளி மாணவர்களையும் பரிசளிப்பதற்காக அடையாளம் கண்டு அவர்களை தொடர்புகொண்டு அழைத்து வந்து அவர்களுக்கு பரிசுகளை கொடுப்பதற்காகவும் முழு முயற்சி எடுத்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுடைய உழைப்பு அளப்பரியது.
அதேபோன்று முருகானந்தம், காமராஜ் என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். திசைகள் தோழர்கள் பலரும் இந்நிகழ்வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து நல்ல முறையில் செயல்பட்டார்கள்.
திசைகளின் தோழர்கள் பலரையும் சந்தித்ததும் எனக்கும் மகிழ்வாக இருந்தது. தலைவர் தட்சணாமூர்த்தி அவர்கள் தொடர்ந்து இதுபோன்று பல்வேறு சமுதாய வளர்ச்சிக்கான செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள் ஆகும். நிச்சயமாக அவர் செயல்படுவார். இன்னும் நிறைய மாணவர்களுக்கு நன்மைகள் செய்து கொண்டே இருப்பார்கள் என்பது 100% உண்மை.
திசைகள் அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களிலும், பல்வேறு சமுதாய முன்னெடுப்புகளும் தொடர்ந்து செயல்பட்டு வருவதும், மாணவர்களுக்காக பல்வேறு தளங்களில் இயங்கி வருவது மிகப்பெரிய பாராட்டுதற்குரியது.
தொடர்ந்து திசைகள் செயல்பட வேண்டும். இவர்களைப் போன்று அரசுப் பள்ளியில் படித்த பல மாணவர்களும் ஒன்றிணைந்து இதுபோன்று அமைப்புகளை ஏற்படுத்தி வேறு வேறு தளங்களில் இன்னும் நல்ல வாய்ப்புகளை வழங்கி செய்ய வேண்டும் என்று இந்த நேரத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நிகழ்வு முடிந்த பிறகு எங்களை திசைகள் தோழர் கபார்கான் அவர்கள் அழைத்துச் சென்று பேருந்து நிலையத்தில் விட்டு சென்றார்கள் நடுவில் தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்தி விட்டு நாங்கள் சென்றோம்.
இரவு ஒன்பதரை மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். மதியம் 12 மணி முதல் இரவு ஒன்பதரை மணி வரை பல்வேறு நிகழ்வுகளை நாங்கள் பார்த்தோம். எங்களுக்கு மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. திசைகளின் தோழர்கள் பலரையும் சந்தித்ததும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.