கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் குறித்து பேசும் பொழுது
உலக இயற்கை பாதுகாப்பு தினம் ஜூலை 28 அன்று கொண்டாடப்படுகிறது. ஆரோக்கியமான சமூகத்திற்கான அடித்தளம் ஆரோக்கியமான சூழலே என்பதை தினத்தின் நோக்கம் ஆகும். பூமியின் இயற்கை வளங்களில் காற்று, தாதுக்கள், தாவரங்கள், மண், நீர் மற்றும் வனவிலங்குகள் ஆகியவை அடங்கும். பாதுகாப்பு என்பது இந்த வளங்களை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கும் வகையில் பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகும். இதில் இனங்கள், மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பன்முகத்தன்மையையும், ஊட்டச்சத்து சுழற்சி போன்ற சுற்றுச்சூழலின் செயல்பாடுகளையும் பராமரிப்பதும் அடங்கும். இயற்கை பாதுகாப்பு என்பதன் பொருள் “பாதுகாப்பு என்பது பூமியையும் அதன் வளங்களையும் மனிதகுலத்தின் நீடித்த நன்மைக்காக புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதாகும்” – கிஃபோர்ட் பிஞ்சோட் என்ற அறிஞர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மனிதன் உள்பட உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்கு ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. இவற்றுக்கு அடிப்படையான இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் கடமையாகும். பிரபஞ்சத்தில் எண்ணற்ற கிரகங்கள் இருந்தாலும் மனிதனும், மற்ற உயிரினங்களும் வாழ்வதற்கு தேவையான இயற்கை வளங்கள் நிறைந்தது பூமி மட்டுமே. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி பெற்று இருக்கும் இதே நேரத்தில், நமது தேவைகளுக்காக இயற்கை வளங்களை அழிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இயற்கை வளங்களை அழிப்பதை தடுப்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் கடமையாகும். வருங்கால தலைமுறைக்கு தொழில்நுட்பம், பொருட்செல்வம் ஆகியவற்றைவிட, இயற்கை வளங்களையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் விட்டுச்செல்வதே சிறந்தது.
இயற்கை வளங்களை பாதுகாத்தல், இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் நம்மால் முடிந்த அளவிற்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் நிவின், செல்விஜாய், கணினி ஆய்வக உதவியாளர் தையல்நாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.