ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 25- ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.
திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் பூஜைகள் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை கோவில் முன்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கூட்டு வழிபாடு செய்தனர்.
நேற்று முன்தினம் கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நள்ளிரவு அக்னிச்சட்டி,கரும்பாலை தொட்டில் உட்பட நேர்த்திகடன் பக்தர்கள் செலுத்தினர்.
நேற்று அதிகாலை உடல்நலம் ஆரோக்கியம் பெற வேண்டி தங்களது பக்தர்கள் உடல் முழுவதும் களிமண் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு, வேப்பிலையை கையில் ஏந்தி மேளதாள இசைவாத்தியங்களுடன் கருங்குளம் கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக நடனமாடி ஊர்வலமாக 100 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
இந்த ஆடி பொங்கல் திருவிழா கிராமத் தலைவரும், ஊராட்சி மன்ற தலைவருமான நாகரத்தினம் தலைமையில், யூனியன் துணை சேர்மன் அய்யனார் முன்னிலையில்,
கிராம செயலாளர் செல்லச்சாமி,பொருளாளர் ஆறுமுகம், ஓய்வு எஸ்ஐ
முருகன், முன்னாள் செயலாளர் முனியசாமி, முன்னாள் பொருளாளர் முத்துமணி, கிராம கணக்கர் மூர்த்தி மற்றும் கிராம பொது மக்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.