ஆகஸ்ட் 15ம் தேதி அன்று இந்திய சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது. இந்த சுதந்திர தின விழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மூவர்ண தேசியக்கொடி (ஹர்கர் டிரங்கா) ஏற்றி கொண்டாட ஊக்குவிக்கும் வகையில் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் பிரச்சாரம் ஆகஸ்ட் 2 துவங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக மதுரை ரயில்வே காலனியில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியில் ரயில்வே இருபாலர் பள்ளி மற்றும் தெற்கு ரயில்வே பெண்கள் நல சங்க பள்ளி மாணவ, மாணவிகள், சாரண, சாரணியர், பள்ளி ஆசிரியர்கள் தேசியக் கொடியை கைகளில் வலம் வந்தனர்.
விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.என்.ராவ், ரயில்வே கட்டமைப்பு வேக சக்தி முதன்மை திட்ட மேலாளர் ஹரிகுமார், கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.