திருநங்கையர் எனும் மூன்றாம் பாலினத்தவர் கல்வியறிவு பெற்று, மற்றவர்களுக்கு இணையாகப் பல்வேறு துறைகளில் முன்னேறி வருவது வரவேற்கத்தக்கது. இன்றளவும்
சமூகத்தில் அவர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன.
கரூர் அரசு காலனியை சார்ந்த திருநங்கை இமயா நாணயங்கள் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சேகரிப்பு கலையில் ஈடுபட்டு வரும் இமயா திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் அமைத்துள்ள நூலகம் மற்றும் புழங்கு பொருட்கள் காட்சியகத்தை பார்வையிட்டு சேகரிப்புக்கலையில் வரலாறு கூறும் நாணயங்கள் குறித்து கேட்டறிந்தார்.
திருநங்கை எனும் மூன்றாம் பாலினத்தவர்க்கு நம்பிக்கை ஊட்டும்விதமாக, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நாணய சேகரிப்புக்கலை குறித்து பேசுகையில், நாணயம் என்பது பொருட்களையும் சேவைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு “பரிமாற்ற அலகு” ஆகும். ஒவ்வொரு நாடும் தனது நாணயத்தின் உற்பத்தியிலும் வழங்கலிலும் தனியுரிமை கொண்டுள்ளன. இவ்வாறு வெவ்வேறு நாணயங்களைக் கொண்ட நாடுகளிடையே வணிகத்துக்கு உதவுவதற்காக நாணய மாற்று விகிதங்கள் உள்ளன.
இவ்விகிதங்கள் ஒரு குறிப்பிட்ட நாணயம் பிற நாணயங்களுக்கு எதிராக என்ன பெறுமதியைக் கொண்டுள்ளது என்பதை முடிவு செய்ய உதவுகிறது. ஒவ்வொரு நாடும் நாணயத்தின் முகப்பில் நாட்டின் லச்சினையையும் பின்புறம் நாணய மதிப்பையும் கொண்டிருக்கும் என்றார்.
சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் சங்க கால நாணயங்கள் குறித்து பேசுகையில், சேர, சோழ, பாண்டிய அரசுகள் தங்களுக்கென தனித்துவமான சின்னங்களையுடைய நாணயங்களை வெளியிட்டன. சேரர்கள் வில்லையும், சோழர்கள் புலிகளையும், பாண்டியர்கள் மீன்களையும் தங்கள் நாணயங்களில் முத்திரை பதித்து வெளியிட்டனர். இந்த நாணயங்கள் பெரும்பாலும் செப்பு மற்றும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன, நாணயம் அச்சு வார்ப்புகளாகவும் இருந்தன என்றார்.