புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: –

புதுச்சேரி மாநில முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் திரு. ந. ரங்கசாமி அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில வளர்ச்சியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஆற்றல் மிகு எதிர்க்கட்சியாக திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் மக்களின் குரலாக எதிரொலிப்பார்கள்.


இந்த அரசு பொறுப்பேற்றவுடன் அனைவருக்குமான மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் அறிவித்த திட்டங்கள் உடனடியாக செயல்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து துறைகளிலும் தாங்கள் நேரிடையாக கவனம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல முதல்வர் அவர்களின் நீண்ட நாள் கனவாக உள்ள மாநில அந்தஸ்து பெறுவதற்கு இப்போதாவது ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் கல்வித்துறை மிகவும் பின்தங்கி உள்ளதை அரசின் கவனத்திற்கு அவ்வப்போது கொண்டு வந்திருந்தாலும், தற்போது வெளிவந்துள்ள சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கல்வித் தரம் எப்போதும் தேசிய அளவில் உற்றுநோக்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. 2025-26 கல்வியாண்டிற்கான சிபிஎஸ்சி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக 87.42% தேர்ச்சி என்பது ஒரு நல்ல தொடக்கமாகத் தெரிந்தாலும், புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் ஒளிந்துள்ள ஏற்றத்தாழ்வுகளும், அரசுப் பள்ளி மாணவர்களின் நிலையும் மிகுந்த வேதனையையும், உடனடி கவனத்தின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.


இந்த ஆண்டு புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 9,152 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 8,001 மாணவர்கள் (87.42%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய அரசுப் பள்ளிகள் (JNV/KV) 100% தேர்ச்சி பெற்று தங்களின் தரத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளன. தனியார் பள்ளிகள் 94.15% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகள் 82.59% தேர்ச்சியுடன் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது கவலைக்குரிய விஷயம்.


தேர்வு முடிவுகளை ஆய்வு செய்யும்போது சில கசப்பான உண்மைகள் வெளிப்படுகின்றன. மண்டல வாரியான ஏற்றத்தாழ்வுகள் உள்ளது. ஏனாம் பகுதி 100% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஆனால், காரைக்கால் பகுதி 81.74% தேர்ச்சியுடன் மிகவும் பின்தங்கியுள்ளது. குறிப்பாக காரைக்கால் அரசுப் பள்ளிகளில் 78.55% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது அந்தப் பகுதியில் உள்ள கல்வி உள்கட்டமைப்பில் உள்ள பெரும் ஓட்டையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தனியார் பள்ளிகளுக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் இடையே உள்ள சுமார் 12% தேர்ச்சி இடைவெளி, சாமானிய மக்களின் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில் இன்னும் கூடுதல் கவனம் தேவை என்பதை உணர்த்துகிறது.

மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து சிபிஎஸ்சி முறைக்கு மாறிய சூழலில், மாணவர்கள் வெறும் மனப்பாடம் செய்வதைத் தாண்டி, கருத்தியல் ரீதியாகப் புரிந்து கொள்வதில் (Conceptual Learning) இன்னும் பின்தங்கியுள்ளனரோ என்ற ஐயம் எழுகிறது. இந்தத் தேர்வு முடிவுகள் வெறும் எண்கள் அல்ல; ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவுகள்.


12-ஆம் வகுப்பு மதிப்பெண்களே உயர்கல்வி வாய்ப்புகளையும், வேலைவாய்ப்பையும் தீர்மானிக்கின்றன. குறைந்த தேர்ச்சி விகிதம் அல்லது குறைவான மதிப்பெண்கள் மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி, அவர்களைத் தவறான பாதையில் தள்ளக்கூடும். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் வலுவான கணிதம் அறிவியல் போன்ற முக்கிய பாடங்களில் அடித்தளம் இல்லையெனில், NEET, JEE போன்ற தேசிய நுழைவுத்தேர்வுகளில் நம் மாணவர்கள் மற்ற மாநிலங்களுடன் போட்டியிடுவது கடினமாகிவிடும்.


மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தனிப்பயன் பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும். தேர்ச்சி விகிதம் 85%-க்கும் குறைவாக உள்ள பள்ளிகளைத் தத்தெடுத்து, அங்குள்ள மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் மற்றும் வாராந்திர மாதிரித் தேர்வுகளை நடத்த வேண்டும்.


சிபிஎஸ்சி முறையில் மாணவர்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என்பது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தேசிய அளவிலான வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும். மிகவும் பின்தங்கியுள்ள காரைக்கால் பகுதிக்குத் தனியாகக் கல்வி நிதி ஒதுக்கி, அங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிரப்ப வேண்டும்.


ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு முறையான ஆலோசனைகளை வழங்கி, அவர்களைத் துணைத் தேர்வுக்கு (Supplementary Exam) உடனடியாக தயார்படுத்த வேண்டும். 100% தேர்ச்சி பெற்ற 7 அரசுப் பள்ளிகளின் கற்பித்தல் முறையை மற்ற பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும்.

கல்வி என்பது ஒரு சமூகத்தின் முதுகெலும்பு. புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவு சிதைந்துவிடக் கூடாது. 87% என்பது சாதனையல்ல, அது ஒரு எச்சரிக்கை மணி. அரசு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, வரும் ஆண்டுகளில் புதுச்சேரி 100% தேர்ச்சியையும், தரமான கல்வியையும் எட்ட முடியும்.

ஆகவே, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள், புதுச்சேரி கல்வித்துறையின் சீர்கேடுகளை களைந்து, மாணவர்களுக்கு தரமான கல்வியை உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *