ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூரில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
திருவாரூர் நகரத்திற்குட்பட்ட நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்.
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் உடனிருந்தனர் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இன்றைய தினம் (05.08.2023) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் “புதுமைப் பெண்” திட்டத்தின் வாயிலாக அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு பட்டயப்படிப்பு பட்டப்படிப்பு தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் 1000 அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகின்றது.
திட்டத்தின் நோக்கமானது பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு இயலாத மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தல் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல், திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்கிறது.
முகாமில் தொழில்துறை, சேவைத்துறை விற்பனைத் துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150 தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 10 ஆயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறவனங்கள் கலந்துகொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும், உயர்கல்வி, சுயவேலைவாய்ப்பு மற்றும் வங்கிகடன் குறித்து சம்மந்தப்பட்ட துறைகளின் அரங்குகள் அமைத்து வழிகாட்டவுள்ளனர்.
இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ,நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து பயன்பெற்றுவருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகர், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர்கள் டி செந்தில் வாரை பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.