ஆர்.கண்ணன் செய்தியாளர் மணப்பாறை.
மணப்பாறையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 47 பேரை போலீசார் கைது செய் தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருப்பூரில் முறையற்ற ஆவணங்களின் கீழ் சிலர் மண் எடுத்ததாகவும், அதுகுறித்து கேட்க சென்ற பாஜக தரவுதள மேலாண்மை பிரிவு மாவட்ட துணைத் தலைவர் லோகநாதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதில், இருதரப்பினரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, பாஜக திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் மணப்பாறை பயணியர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரத் தலைவர் கோல்டு கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நகர பொருளாளர் சுந்தரமூர்த்தி, குமரேசன், கலாதுரை, ராஜாராம், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், வருவாய், காவல்துறையினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உள்பட 47 பேரை கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.