மு. மேத்தா கவிதைகள் !
நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி தெரு, பாண்டி பசார், சென்னை-600 017. விலை : ரூ. 180.


   புதுக்கவிதை என்று சொன்னவுடன் அனைவரின் நினைவிற்கும் மோனையைப் போல முந்தி வந்து நிற்பவர் கவிஞர் மு. மேத்தா.  கவி வேந்தர் பட்டம், பரிசு, விருது, பாராட்டு என்று பல பெற்று இருந்த போதும், எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிய மனிதர், இனியவர், பண்பாளர், பந்தா எதுவும் இல்லாத மாமனிதர், பெரும்பாலும் அவர் மதுரைக்கு வரும்போதெல்லாம் சந்திப்பது உண்டு.  தொடர்வண்டி நிலையம் வரை சென்று வழியனுப்பியதும் உண்டு.

   தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுடன் நான் உள்பட பட்டிமன்ற குழுவினர் அனைவரும், கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் சென்னையில் உள்ள  இல்லத்திற்கு முன்அறிவிப்பு இன்றி சென்று இருந்தோம்.  அவர் சென்னைக்காரர்கள் போல இல்லாமல் பழங்கள் வழங்கி உபசரித்து கலந்துரையாடி வழிஅனுப்பி வைத்தார். 

அப்போது முனைவர் பட்ட ஆய்வாளர் திரு. இளையராஜா அவரிடம் உதவியாளராக இருந்தார். அவரது ஆய்வில் எனது ஹைக்கூ கவிதைகளை மேற்கோள் காட்டியவர். கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் மனைவியும் இன்முகத்தோடு வரவேற்று மகிழ்ந்தார்கள். கண்ணீர் பூக்கள் என்ற நூல் வெளிவருவதற்கு தனது நகைகளைத் தந்து உதவிய தங்கமங்கை அவர்கள். பசுமரத்து ஆணி போல பதிந்தது அன்றைய சந்திப்பு. கவிவேந்தர் மு. மேத்தா அவர்கள் கர்வம் என்றால் என்னவென்றே அறியாத முன்மாதிரி-யான கவிஞர்.

   எனது இனிய நண்பர் வதிலை கவிவாணன் அவர்கள் கவிவேந்தர்

மு. மேத்தா அவர்கள் பற்றி விரைவில் நூல் தொகுத்து வெளியிட உள்ளேன். நீங்கள் ஒரு கட்டுரை அனுப்புங்கள் என்றார். ஏற்கனவே
கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் கண்ணீர் பூக்கள் உள்பட பல நூல்களின் விமர்சனங்கள் இணையங்களில் பதிவு செய்துள்ளேன். அவற்றை அனுப்பவா? என்று கேட்ட போது அவர் ‘மு. மேத்தா கவிதைகள்’ என்ற நூல் வாங்கிப் படித்து, புதிய கட்டுரை ஒன்று அனுப்புங்கள் என்றார். அதன் விளைவே இந்தக் கட்டுரை.

   கவிதா வெளியீடாக வந்துள்ள பெருமைமிகு நூல்.  கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் பல்வேறு நூல்களில் இருந்து சாகித்ய அகதெமி விருதாளர் கவிஞர் சிற்பி புதுக்கவிதை ஆய்வாளர் கவிஞர் பாலா இருவரும் தேர்ந்தெடுத்து தொகுத்த நூல்.  மேத்தாவின் கவிதைகள், பழங்கள் என்றால் இந்த நூலில் பழரசமாக வழங்கி உள்ளனர்.  இந்த நூல் படித்தவர்கள் இதன் மூல நூல்கள் வாங்கிப் படிப்பார்கள்.  தேடிப் படிப்பார்கள்.  இன்றைய இளம் கவிஞர்கள், வளரும் கவிஞர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

   வாழும் காலத்திலேயே கவிவேந்தர் மு. மேத்தா அவர்களுக்கு அவரது படைப்புகளாலே மகுடம் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.  மகாகவி பாரதிக்கு அவர் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு சிறப்பு நடக்கவில்லை.  நடந்திருந்தால் அவரை 39 வயதில் இழந்திருக்க மாட்டோம்.  மற்ற மாநிலங்கள் போல தமிழகத்தில் படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே பாராட்டி மகிழும் நிலை வர வேண்டும்.  திரைப்பட நடிகர்களுக்கு தரும் முக்கியத்துவத்தை படைப்பாளிகளுக்கு தர முன் வர வேண்டும்.

   முனைவர் கவிஞர் சிற்பி அவர்களின் அணிந்துரையில் இருந்து சிறு துளிகள்.  “புதுக்கவிதையின் இரண்டாம் காலகட்டத்தில் ஒரு சகாப்தத்தைத் தனக்கே உரியதாகச் செதுக்கிக் கொண்டவர் கவிஞர் மு. மேத்தா. 

   வசீகரமான இளமை ததும்பத் ததும்ப அவர் எழுதிய கவிதைகளுக்குத் தமிழகத்தில் யாருக்கும் இல்லாத ஒரு வாசகர் பட்டாளம் உருவாயிற்று. இதை ஒரு வியப்புறு நிகழ்ச்சி (PHENOMENON) என்றே குறிப்பிட வேண்டும்.  இது மறைக்க முடியாத வரலாறு.

   புதுக்கவிதையின் தாத்தா கவிவேந்தர் மேத்தா அவர்கள், இந்தியாவின் வரைபடத்தையே தனது புதுக்கவிதையில் காட்சிப்படுத்திம் அழகே அழகு!

   எழுக ... என் தேசமே!

தாயே !
உன்னுடைய கால்களோ
கன்னியாகுமரியின் கடற்கரை ஓரம்
உன்னுடைய தலையிலோ
இமயப்
பனிமலையின்
ஈரம் …
வலதுகை தொடுவது
வங்காள் விரிகுடா …
இடதுகை நனைவது
அரபிப் பெருங்கடல்!
இப்படி
ஈரம் சூழ இருந்தாலும்
உன் வயிற்றில்
எந்த நெருப்பு
எரிந்து கொண்டிருக்கிறது?
அதனால் தான்
ஆறுகள் என்கிற
ஈரத்துணிகளைக்
கட்டிக்
கொண்டிருக்கினறாயா?

   இந்தியாவின் வரைபடத்தை மட்டுமன்றி, ஒழிக்கப்படாத பசி, பட்டினி, வறுமையையும் கவிதையில் சுட்டியது சிறப்பு.
   மதம் அன்று நெறியாக இருந்தது.  ஆனால் இன்று வெறியாக மாறி வருகின்றது. மதம் பண்படுத்தப் படைக்கப்பட்டதாகச் சொன்னார்கள்.  ஆனால் இன்று புண்படுத்தவே பயன்படுத்துகின்றனர்.  காந்தி, பிறந்து வாழ்ந்த தேசத்தில் மதச் சண்டைகள் நடப்பது வெட்கக் கேடு.  மதமா? மனிதமா? என்ற கேள்வி வந்தால் மனிதத்தை தேர்வு செய்வதே மனிதாபிமானமாகும்.  இன்று நாட்டில் நடக்கும் மதச் சண்டைகளை சுட்டும் விதமாக ரத்தினச் சுருக்கமாக வடித்த கவிதை மிக நன்று.

   ‘மத’யானை வருகிறது
   மனிதர்களை
   மிதித்தபடி ..

.
மாமனிதர் அப்துல்கலாம் அவர்களும், இந்தியாவின் ஏழ்மை நீக்க, விவசாயம் செழிக்க, உற்பத்தி பெருக இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து உதவுகிறார். சிலர் நதிகளை சிறைபிடித்து தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றனர். தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்று குரல் கொடுத்தும் வருகின்றனர். ரத்தினச் சுருக்கமாக ஹைக்கூ வடிவில் வடித்த கவிதை மிக நன்று.

   நாய்களைக்
   கட்டி வை
   நதிகளை அவிழ்த்து விடு!
   இங்கே நாய்கள் என்பது குறியீடாக உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது என்று மனிதாபிமானமற்ற முறையில் கூச்சலிடும் மனிதர்களையே நாய் என்று குறிப்பிடுகின்றார்.நதிகளை தேசியமயமாக்கக் கூடாது என்று சிறு பிள்ளைத் தனமாக சொல்பவர்களின் தலையில் கொட்டும் விதமாக உள்ளது .

   ‘உன்னுடைய கதை இது’ என்ற கவிதையில் ஒரு கதையையே கவிதையாக வழங்கி பெண்ணின் உணர்வை விதைத்த விதம் நன்று.  முடிப்பு முத்தாய்ப்பு.

   தமிழின் சிறப்பு எழுத்துக்களில் உள்ளது. எழுத்துக்களின் சிறப்பு பற்றி வடித்த கவிதை ஒன்று இதோ!

   எழுத்துக்கள்!

என்னையே நான்
கண்டுகொள்ள உதவும்
கண்ணாடி
என்னை அறியாதவர்க்கு
அறிமுகப்படுத்தும்
புகைப்படம்
சில சமயம் அலைநீரில் நிழல்
ஒரு சில
சமயங்களில்
கற்களில் என்
சிலை வார்ப்பு
முகம் திருப்பிக் கொள்ளும்
பகைவரிடமும்
எனக்காக
வாதாடும்
இன்னொரு முகம்
சிலருக்கு வெறும்
நகம்
எனக்கு முகம் :

   கவிதைகளால் புகழ் அடைந்தவர் கவிவேந்தர் மு. மேத்தா.  அவரை நேரடியாகப் பார்க்காதவர்களும் அவரது கவிதையை படித்து இருப்பார்கள்.  உண்மை தான், அவரது கவிதை எழுத்துக்கள் தான் பலருக்கு அவரது புகைப்படம் என்பது உண்மை.

   கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் கவிதையில் வரும் உவமைகள் ஒப்பீடுகள் எளிதில் அனைவருக்கும் புரியும் வண்ணம் இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக உள்ள கவிதை வரிகள் இதோ!

உறங்கிக் கொண்டிருக்கும்
போர்வாளைக் காட்டிலும்
ஊர்ந்து கொண்டிருக்கும்
புழு கூட உயர்ந்தது தான்!

   காதலின் முன்னுரை கண்களால் எழுதப்படுகிறது.  காதலியின் கண்கள் பற்றி வர்ணிக்காத கவிஞர்கள் தான் உண்டோ?  இதோ கண்கள் பற்றிய மிகச் சுருக்கமான கவிதை ஒன்று.

   கணக்கு!
   எத்தனை தடவை
   கொள்ளையடிப்பது ....
   ஒரே வீட்டில்
   உன் கண்கள்!

   மாத ஊதியம் வாங்கியதும், மளிகைக் கடைக்கு, பால் கடைக்கு, தொலைபேசிக்கு, அலைபேசிக்கு, மின்சாரத்திற்கு, எரிவாயுக்கு என்று பணம் செலவாகும், கையில் எதுவும் மிஞ்சாசு, கடன் வாங்க வேண்டிய அவல நிலை.  ஊதியம் உயர்ந்த போதும் அதைவிடக் கூடுதலாக விலைவாசியும் உயர்ந்து விடுகிறது.  ஏழைமக்கள், நடுத்தர மக்கள் வாழ்க்கை நடத்துவதே பெரிய போராட்டமாக உள்ளது. நாட்டில் நடக்கும் அவலத்தை சுட்டும் கவிதை ஒன்று.
   முதல் தேதி!
   என்னுடைய சம்பள நாளில்
   எண்ணி வாங்குகின்ற
   பளபளக்கும் நோட்டுகள்ல்
   எவரெவர் முகமோ
   தெரியும்
   என் முகத்தைத் தவிர!

   கவிவேந்தர் மு. மேத்தா அவர்கள் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  அவர் ஊதியம் பெற்று செலவு செய்த உணர்வை அப்படியே கவிதையாக்கி உள்ளார்.  படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவரவர் அனுபவத்தை உணர்த்தி உள்ளார்.  இக்கவிதை படித்த போது எனக்கு, ‘கையிலே வாங்கினேன் பையிலே போடல, காசு போன இடம் தெரியலை’ என்ற பழைய திரைப்படப் பாடல் நினைவிற்கு வந்தது.  இது தான் படைப்பாளியின் வெற்றி ஒன்றை படிக்கும் போது அது தொடர்பான மற்றொன்றை நினைவூட்ட வேண்டும்.

   மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள். பிதா என்ற தந்தை பற்றிய கவிதை நன்று.  இக்கவிதை படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் அவரது அப்பா பற்றிய நினைவு வந்தே தீரும் என்று உறுதி கூறலாம்!

   தந்தைக்கு ஒரு தாலாட்டு!
   பள்ளிக்கூடம் போகாத
   பல்கலைக்கழகமே
   உன்னிடத்தின் தானே ...
   பாடங்களை நான்
   படிக்கத் தொடங்கினேன் !
   பார்க்கும் கண்களுக்கு
   நீ பாமரன் தான் ! என்றாலும்
   ஞானமெல்லாம் உன் வீட்டில்
   நடை பயில வாராதோ?
   உன்னைப் போல நானும்
   உருகக் கூடாதென்றா
   மெழுகு விளக்கே
   நீ என்னை
   மின்விளக்காய் ஏற்றி வைத்தாய்?

   காதல் பற்றி பாடாத கவிஞர் இல்லை, காதலைப் பாடாத கவிஞர் கவிஞரே இல்லை.  முற்றிலும் உண்மை.  பெரும்பாலான கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகவே இருக்கும்.  காதலைத் தாண்டி மற்ற பிரச்சனைகளைப் பற்றியும் கவிதை எழுதியவர்களே கவி உலகில் நிலைக்கிறார்கள்.  கவிஞர் மு. மேத்தா அவர்களின் கவிதைகளில், காதல் கவிதை ஊறுகாய் போல மட்டுமே இருக்கும்.

   காதல்!
   விரித்தவர்களே
   அகப்பட்டுக் கொள்ளும்
   விசித்திர
   வலை.

   கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் கவிதைகளில் எள்ளல் சுவைக்கும் பஞ்சம் இருக்காது.  எள்ளல் சுவையுடன் நின்று விடாமல் அடுத்து சிந்தித்து உணர்ந்து கொள்ளும் விதமாகவும் இருக்கும்.

   சிறு குறிப்பு வரைக!
   நெய்வேலி டிசம்பர் 2003
   தண்ணீர் வேண்டி
   பிரமாண்டமான
   நட்சத்திரப் பேரணி
   நடிகர்களைக் காணக்
   காத்துக் கிடந்த
   கூட்டம்
   கவலைப்பட்டது ...
   மழை வந்து கெடுத்து விடுமே என்று.

   வெளிச்சம் வெளியே இல்லை என்ற தலைப்பிலான கவிதைச் சிறுகதை மிக நன்று. உள்ளத்து உணர்வுகளின் பதிவு.

   நாம் வாங்கும் எல்லா இதழ்களின் பக்கங்களையும் முழுமையாக படித்து விடுவதில்லை.  விடுபட்ட பக்கங்களும் உண்டு.  அதனை உணர்த்திடும் புதுக்கவிதை.

   ஞானம்!
   எடைக்குப் போடும் போது தான்
   தெரிகிறது
   பத்திரிக்கைகளில்
   படிக்காமல் விட்ட
   பயனுள்ள பக்கங்கள் !

   கவிவேந்தர் மு. மேத்தா அவர்களை புன்னகை மன்னன் என்றே சொல்லலாம், எப்போதும் முகத்தில் புன்னைகையை அணிந்து இருப்பவர்.  புதுக்கவிதைக்குப் புதுப்பாதைப் போட்டுத் தந்தவர்கள் என்ற கர்வம் என்றும் கொள்ளாதவர்.  அகந்தை என்றால் என்னவென்று அறியாதவர்.  இவரது புதுக்கவிதைகள் படித்துத் தான் பல கவிஞர்கள் உருவானார்கள் என்பது வரலாறு.  நான் என்றும் அவரது கவிதைகளின் ரசிகன்.  ஆர்ப்பாட்டம் இல்லாத, அமைதியான, எளிமையான, இனிமையான மனிதர், கவிவேந்தர் மு. மேத்தா அவர்களுக்கு அவர் வாழும் காலத்திலேயே மிக உயர்ந்த விருதுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.  மைய அரசு யார் யாருக்கோ விருது வழங்குகின்றார்கள்.  இவருக்கு வழங்கிட முன்வர வேண்டும்.  இது வாசகன் விருப்பம்.

.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *