கோவை
அமைச்சர் உதயநிதியை பற்றி பேசியதற்கு வழக்கு பதிவு- இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனம் குறித்து திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மட்டும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறி இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி மனோகர், சேலம் கோட்டத் தலைவர் சந்தோஷ், வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் பலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பகுதியில் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய காடேஸ்வர சுப்ரமணியம் தமிழக காவல்துறை இந்து முன்னணியினர் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இல்லை என்றால் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என கூறினார்.
மேலும் இந்த வழக்குகளுக்கு எல்லாம் இந்து முன்னணி அஞ்சாது என தெரிவித்த அவர் எத்தனையோ பேர் இந்து மதத்தை பற்றி தரைக்குறைவாகவும் இழிவாகவும் பேசிய போது கைது செய்யாத காவல்துறை தற்போது ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என சாடினார்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.