தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கீழவெண்மணி நினைவு நாள் கருத்தரங்கம் கும்பகோணம் ஏஐடியூசி தொழிற்சங்க அரங்கத்தில் மாவட்ட தலைவர் க.சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் ஆர்.கே.கலையரசன் வரவேற்று பேசினார்.
ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர்கள் ஏ.ராதாகிருஷ்ணன், ஏ.ஜி.பாலன், மாவட்ட குழு உறுப்பினர் கே.நாராயணன் ஏஐடியூசி தொழிற்சங்க நிர்வாகிகள் கே.சரவணன் மூத்த உறுப்பினர்கள் எம்.சீதாராமன், சி.ராயப்பன், கே.ராமமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும்.
வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ 600/- வழங்க வேண்டும்.
வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு காலம் தவறாது ஊதியம் வழங்க வேண்டும். திட்டத்தை நகர் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட நிலமற்ற கிராமத் தொழிலாளர் அனைவருக்கும் 55 வயது முதல் மாதம் ரூ 5000/- ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
வீடில்லா விவசாயத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வீடு சமயலறை, கழிப்பறை, கால்நடை கூடம் கொண்ட தரமான வீடுகள் கட்ட குடும்பத்திற்கு (தலா 8 சென்ட்) மனை நிலம் ஒதுக்கீடு செய்து, வீடு கட்ட ரூ 5 லட்சம் நிதி வழங்க வேண்டும்.
மாவட்ட பொருளாளர் க.கண்ணகி நன்றி கூறினார்.