4 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து சவூதி அரேபியா ஜித்தா நகருக்கு நேரடி விமான சேவை தொடங்கியது

ஹஜ் பயணத்திற்கான கூடுதல் இடங்கள் பெற 19ந் தேதி கூட்டம்

ஜித்தா விமான சேவையை தொடங்க உதவிய பிரதமருக்கு நன்றி

அபூபக்கர் பேட்டி

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியாவில் ஜித்தா நகருக்கு சவூதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. அந்த விமான சேவை கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜ நிலை திரும்பிய பின் சென்னையில் இருந்து பல நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால் ஜித்தா நகருக்கு இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்காமல் இருந்து வருகிறது. இதனால் சென்னையில் இருந்து புனித உம்ரா பயணத்திற்கு செல்பவர்களும் வேலைக்காக செல்பவர்களும் குவைத், பக்ரைன், துபாய், இலங்கை வழியாக செல்ல வேண்டி இருந்தது. இதனால் சவூதிக்கு அரேபியாவிற்கு செல்ல 13 மணி நேரம் ஏற்படுவதால் நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபூபக்கர் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முதல் இருந்து சவூதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் ஜித்தா- சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்கியது. இந்த விமான சேவை வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படுகிறது. நேரடியாக விமான சேவை தொடங்கியதால் அதில் 215க்கும் மேற்பட்ட புனித உம்ரா பயணிகள் சென்றனர். அவர்களுக்கு இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபூபக்கர் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபூபக்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் இருந்து ஜெட்டாவிற்கு நேரடி விமான சேவை பல ஆண்டுகளுக்கு பின் இயக்குகிறது. ஜித்தாவிற்கு நேரடியாக செல்வதால் ஐந்தரை மணி நேரத்தில் செல்வதால் பயண நேரம் குறைகிறது. மேலும் 200 ரியால் முதல் 610 ரியால் வரை பணம் மிச்சம் ஆகும். நேரடி விமான சேவையை சென்னையில் இருந்து தொடங்க வேண்டும் என இந்திய ஹஜ் அசோஷியேஷன் சார்பாக கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. நேரடி விமான சேவையை தொடங்க உதவிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியா உம்ரா, ஹஜ் துறை அமைச்சருக்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2024ம் ஆண்டு ஹஜ் பயணம் 100 சதவீதம் டிஜிட்டல் செய்யப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து 1 லட்சத்தி 35 ஆயிரம் ஹஜ் விண்ணப்பங்கள் வந்து உள்ளது. தமிழகத்தில் ஹஜ் விண்ணப்பங்கள் வழங்க இன்னும் 17 நாள் கால அவகாசம் உள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹஜ் விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இந்த ஆண்டு ஹஜ் பயண ஒதுக்கீடு அதிகமாக கிடைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. உலக இஸ்லாமிக் கவுன்சில் கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிதி ராணியுடன் நானும் வருகிற ஜனவரி 19ந் தேதி பங்கேற்க உள்ளோம்.

இந்திய ஹஜ் பயணிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மானியம் நிறுத்தப்பட்டு விட்டது. முதல் விமானத்தை வெற்றிகரமாக்கிய விமான நிலைய ஆணையம், சுங்க இலாகா, சி.ஐ.எஸ்.எப்., குடியுரிமை, தமிழக போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை- ஜித்தா நேரடி விமான சேவை 4 ஆண்டுகளுக்குப் பின்ப மீண்டும் தொடங்கப்பட உள்ளதால் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கும் வேலைக்காக செல்பவர்களும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *