புகை பிடித்தல் உயிர் குடிக்கும் – அதுபோல
பகை எழுத்தால் தமிழ் ஒடியும்!
கவிஞர் இரா. இரவி
புகை பிடித்தல் உயிர் குடிக்கும் நுரையீரலில்
புற்றுநோய் வந்து உயிர் பறிக்கும் !
பகைஎழுத்துக்கள் தமிழை ஒடிக்கும்
பைந்தமிழின் தனித்தன்மையை சிதைக்கும் !
புகை என்பது மனித உயிருக்குப் பகையாகும்
பகை எழுத்தும் தமிழ்மொழிக்குப் பகையாகும் !
இருநூற்றி முப்பத்தி நான்கு எழுத்துக்கள் இருக்கையில்
எதற்கு நமக்கு பிறமொழி எழுத்துக்கள் !
ஒரு குடம் பாலில் சிலதுளி நஞ்செனவே
ஒப்பற்ற தமிழ்ப்பாலில் நஞ்சு எதற்கு?
இருப்பதாறு எழுத்து மட்டுமே உள்ள ஆங்கிலத்தில்
எவரும் பிறமொழி எழுத்தைச் சேர்ப்பதில்லை !
வெண்சுருட்டு உயிரைச் சுருட்டி விடும்
வடமொழி எழுத்து தமிழைச் சுருட்டி விடும் !
உடல் நலத்திற்குக் கேடு தருவது புகைப்பழக்கம்
உன்னத மொழி நலத்திற்குக் கேடு தருவது பகைஎழுத்து !
தனக்குத் தானே வைத்துக் கொள்ளும் சுயகொள்ளி வெண்சுருட்டு
தமிழ்மொழிக்கு வைக்கும் மொழிக்கொள்ளி பகை எழுத்து !
எல்லா வளமும் நம் தமிழ்மொழியில் உண்டு
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் !
நண்பன் புகைக்க தொற்றிக் கொள்ளும் புகை பிடித்தல்
நான்கு பேர் பேசிட தொற்றிக் கொள்ளும் திமிங்கிலம் !
உடலை மாசாக்கி அழிக்கும் புகைபிடித்தல்
ஒப்பற்ற தமிழை மாசாக்கி அழிக்கும் பகைஎழுத்து !
தனித்தமிழ் இயக்கம் இங்கே உயிர்பெற வேண்டும்
தமிழர்கள் யாவரும் நல்ல தமிழில் பேசி எழுதிட வேண்டும்
புகைபிடித்தல் பழக்கத்திற்கு வைத்திடு முற்றுப்புள்ளி
பிறமொழி மோகம் விடுத்து தமிழை நேசி வாசி