வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஊராட்சியில் குடியரசு தின விழா-கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் மோகன் தலைமையில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம், ஆலங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தின விழா நடந்தது, விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் மோகன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆலங்குடி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் மோகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசாத்திசின்னப்பா, ஒன்றிய குழு உறுப்பினர் காந்திமதி ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊராட்சி செயலாளர் சேரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் ஆலங்குடி ஊராட்சியில் நடைபெற்று முடிந்த பணிகள் குறித்தும், இனி நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் குறித்தும், இனி தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர், ஊராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளிலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு, அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து,கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டனர்.