கழுகுமலை அருகே ஆராய்ச்சிபட்டி சாயமலை ஸ்ரீ ராமர் ஆஞ்சநேயர் கோவில் மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக ஒன்றிய செயலாளருமான சுப்பையாபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் சாயமலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜகுலராமர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக லயன்ஸ் கிளப் சார்பில் மாவட்ட ஆளுநர் அய்யாத்துரை கலந்து கொண்டு புதிய மண்டபத்தை திறந்து வைத்தார்.
தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் முன்னாள் எம்எல்ஏ சுப்பையாபாண்டியன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். முன்னதாக ராமர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் டாக்டர் போத்திராஜ், அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் செந்தில்குமார், திமுக ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் செந்தில்நாதன், ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி கண்ணன், மருதங்கிணறு பஞ்சாயத்து தலைவர் தங்கதுரை, ஒன்றிய பொறியாளர் முருகேசன், சர்வதேச மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காளிராஜ்பாண்டியன், முக்குலத்தோர் புலிப்படை கயத்தாறு ஒன்றிய செயலாளர் காளிராஜ், அமமுக சார்பில் ஈஸ்வரபாண்டியன், முருகன் மற்றும் சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.