தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி மாவட்ட சமூகநல அலுவலர் ஆலோசனையின்படி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில்தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் பயிற்சி பட்டறை வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) முன்னிலை வகித்தார்.வட்டார சமூக நல விரிவாக்க அலுவலர் (மகளிர்) எலிசபத் ராணி வரவேற்றார்.
இப்பயிற்சியில் பெண் குழந்தைகள் கல்வி, பாதுகாப்பு, உயர் கல்விக்கான புதுமைப் பெண் திட்டம், பெண்களுக்கான உதவி எண் 181, அனைத்து துறைகளும் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து சகி- ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஜெயராணி விவரித்தார்.
குழந்தைகள் உதவி எண் மற்றும் போக்சோ சட்டம் பற்றி குழந்தைகள் பாதுகாப்பு அலகு அருணா எடுத்துரைத்தார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி முக்கியத்துவம் தொடர்பான உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டது . பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இப்பயிற்சி பட்டறையில் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், கல்லூரணி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜ்குமார், பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், காவல்துறை, ஊரக வளர்ச்சி துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மகளிர் திட்டம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் ஊர் நல அலுவலர் ஜெயா மேரி நன்றி கூறினார்.