நாடாளுமன்ற தேர்தலில் சொந்த ஊர்களில் வாக்களிக்க, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களில் பலர், விமானங்களில் சொந்த ஊர் புறப்பட்டு செல்வதால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு.

இதை அடுத்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களில் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு.
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், நாளை 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. எனவே மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக, தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்கள், பெரிய சிறிய வர்த்தக நிறுவனங்கள் போன்றவைகளில் பணி புரியும் அனைவருக்கும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளியூர் வாசிகள், குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்காக, சொந்த ஊர் புறப்பட்டு செல்கின்றனர்.
பஸ் ரயில்களில் சீட்கள் கிடைக்காததாலும், ஒரே நாள் விடுமுறையில் சொந்த ஊர் சென்று திரும்ப வேண்டியது இருப்பதாலும், அவசரமாக விமானங்களில் சென்று வாக்களிக்க ஏராளமானவர்கள் புறப்பட்டு செல்கின்றனர்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் இன்று பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.
அதிலும் இன்று மாலை, இரவு செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பயணிகள் கூட்டம் அதிகரித்ததை ஒட்டி வழக்கம்போல், விமான டிக்கெட் கட்டணங்களும் அதிகரித்து உள்ளன.
சென்னை தூத்துக்குடி வழக்கமான விமான கட்டணம்,(ரூ.3,957) இன்று ரூ.8,297 முதல் ரூ.12,716 வரை.
சென்னை மதுரை கட்டணம் (ரூ.3,674) இன்றைய கட்டணம் ரூ.8,555 முதல் ரூ.11,531 வரை.
சென்னை திருச்சி கட்டணம் (ரூ.2,382) இன்றைய கட்டணம் ரூ.6,344 முதல் ரூ.8,507 வரை.
சென்னை கோவை கட்டணம் (ரூ.3,342) இன்றைய கட்டணம் ரூ.7,881 முதல் ரூ.8,616 வரை.
சென்னை சேலம் கட்டணம் (ரூ.2,433) இன்றைய கட்டணம் ரூ.5,572.
இன்று விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வாக இருந்தாலும், தங்களுடைய சொந்த ஊர் சென்று வாக்குகளை பதிவு செய்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமான கட்டணங்கள் பற்றி கருத்தில் கொள்ளாமல், ஆர்வமுடன் பயணிகள் முன்பதிவுகள் செய்து பயணிக்கின்றனர்.
இந்த அளவு கட்டண உயர்வு இருந்தாலும், அனைத்து விமானங்களிலும், ஒரு சில சீட்டுகள் மட்டுமே உள்ளதால், பயணிகள் கடும் போட்டியில் முன்பதிவு செய்கின்றனர்.
இதைப்போல் பயணிகள் கூட்டம் அதிகம் இருப்பதால், பஸ், ரயில்கள் கூடுதலாக இயக்குவது போல், விமானங்கள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று அதிகாரிகளை கேட்டபோது, இது பற்றி நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது.
டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் அனுமதி பெற வேண்டும். மேலும் கூடுதல் விமானங்கள் இருக்கும்போது, சென்னையில் இருந்து செல்லும்போது பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த விமானங்கள் திரும்பி வரும்போது காலி விமானங்களாக வருவதால், நிறுவனத்துக்கு இழப்புகள் ஏற்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.