நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கந்தசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவிலில் சிறப்பு யாக சாலை அமைக்கப்பட்டு 6 கால யாக பூஜைகள் நடந்தது. கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
முன்னதாக 6-ம் கால யாக பூஜைகள் மற்றும் திருக்குடங்கள் யாக சாலையிலிருந்து ஆலயத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டன.
இதனை அடுத்து இராஜகோபுரம், மூலவர், விமானம் சகல கோபுர கலசங்களுக்கும் திருக்குட நன்னீராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டதை அடுத்து, விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கந்தசாமி ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜை மற்றும் மஹா தீபராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதனைத் தொடர்ந்து மாலையில், சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம், சுவாமி திருவீதி உலா , அன்னதானம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் C. கிருஷ்ணன், பரம்பரை அறங்காவலர்-பூசாரி திருமதி. K. சந்திரலேகா ஆகியோர் செய்தனர்.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நாமக்கல் சேலம் மாவட்ட பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.