ஶ்ரீபெரும்புதூரில் வைணவ மகான் ஶ்ரீ ராமானுஜரின் 1007வது அவதார உற்சவத்தின் திருத்தேரோட்டம் – தேரை வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்……
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலுக்கு பூதபுரி ஷேத்ரம் என்ற பெயரும் உண்டு.இத்திருக்கோயிலில் தான் ஸ்ரீ ராமானுஜர் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று 1017 ஆம் ஆண்டு பிறந்ததாக
வரலாறுகள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீபெரும்புதூர் பகுதி மக்கள் ஆதிகேசவ பெருமாளை பெரியவர் என்றும் வைணவத்தில் பிறந்து அக்காலத்தில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டராமானுஜரை சிறியவர் என்றும் அழைப்பது வழக்கம்.
ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் சிறப்பம்சம் ஸ்ரீஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் பிரம்மோற்சவமும்
ராமானுஜருக்கு அவதார உற்சவம் என்று 10 நாட்கள் உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு ராமானுஜரின் 1007வது அவதார உற்சவம் கடந்த மே 02 ஆம் தேதி கோலகலமாக துவங்கியது.
தங்கப் பல்லக்கு, மங்களகிரி வைபவம், சிம்ம வாகனம் , குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் ஶ்ரீராமானுஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ராமானுஜர் அவதார உற்சவத்தில்
முக்கிய திருவிழாவாக கருதப்படுவது ராமானுஜரின் திருத்தேர் உற்சவமாகும். இந்த திருத்தேர்விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இவ்விழாவில்50 அடி உயரம் கொண்ட இத்திருத்தேரினை காண தமிழகம் மட்டுமின்றி அன்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரின் தரிசனம் பெற்றனர்.
திருத்தேரானது தேரடி வீதி, திருவள்ளூர் சாலை ,
திருமங்கையாழ்வார் தெரு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சுமார் 2கிமீ பவணி வந்து நிலையை அடைந்தது.
வழியெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆன்மிக அன்பர்கள் மூலம் மோர், பானகம் , குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த தேர் திருவிழாவில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவாரு 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.