திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான்- நீடாமங்கலம் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம் இருப்பினும் நடப்பு பருவத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த வாரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட செயலாளர் மல்லிகா (பொ) உத்தரவின் பேரில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. பருத்தி ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்தனர்.4 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 7 ஆயிரத்து 339 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 6 ஆயிரத்து 279 ரூபாய்க்கும், சராசரி விலையாக குவிண்டால் ரூபாய் 6 ஆயிரத்து 973 க்கும் ஏலம் போனது.
பருத்தி மறைமுக ஏலத்தில் 322.27 குவிண்டால் பருத்தி 22 லட்சத்து 56 ஆயிரத்து824 ரூபாய்க்கு ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியை நன்கு உலர்த்தி கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்ளலாம். சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தி இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன்பெற ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் வீராசாமி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.