மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் கள்ளிக்குடி புதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் வெட்டுடையார் காளியம்மன் மாரியம்மன் மண்டு கருப்பசாமிஉள்ளிட்ட பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாள் யாக வேள்வி பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை முளைப்பாரி ஊர்வலம் மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் காலை மங்கல இசை முழங்க மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. ராமேஸ்வரம், அழகர்கோவில், காசி, கங்கை, உள்ளிட்ட திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க யாகசாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானத்தில் வட்டமிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கோவிலில் கருவறையில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் மலர் அலங்காரமும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மேற்கு தெற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், அதலை ஒன்றிய கவுன்சிலர் ஜெகதாராதாகிருஷ்ணன், மற்றும் குமாரம்பாலன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கள்ளிக்குடிபுதூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.