ரூ.213 கோடி மதிப்பில் 29 கி.மீ தூரத்தில் விரிவாக்கம் – தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தகவல்!
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் அருகே மீனாட்சி மிஷன் மருத்துவமனை இருந்து கப்பலூர் சுங்கச்சாவடி இணைப்பு சாலை வரை சுமார் 29 கி.மீ தூரத்திற்கு தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பாக 2 வழி சாலையாக இருந்த இப்பகுதி 4 வழிச் சாலையாக விரிவு படுத்தப்பட்டது.
கடந்த 2017 ம் ஆண்டு சுமார் ரூ.213.69 கோடி மதிப்பில் துவங்கப்பட்ட இந்த விரிவாக்க பணி கடந்த 2020 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது.
28 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் வண்டியூர் சிந்தாமணி வளையங்குளம் உள்ளிட்ட மூன்று இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வைகை ஆற்றை கடக்கும் வகையில் புதியதாக மேம்பாலம் அமைக்கப்பட்ட நிலையில் அந்த மேம்பாலம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதால் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தற்போது சேதம் ஏற்பட்டுள்ளது. பாலத்தின் மையப்பகுதியில் உள்ள இரும்பு கம்பிகள் பெயர்ந்து வந்ததின் காரணமாக தற்போது துருப்பிடித்த பழைய கம்பிகளை அகற்றிவிட்டு புதிய கம்பிகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் பாலம் அதிக அளவு அதிர்வு ஏற்படுவதால் பாலத்தில் செல்லக்கூடிய வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரூ.213 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை விரிவாக்க பணி தரமற்ற முறையில் கட்டப்பட்ட பாலத்தால் அந்த வழியாக செல்லக் கூடிய வாகன ஓட்டிகள் அச்சத்தில் சாலையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.