கோவையில் SDPI சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்: 500க்கும் மேற்பட்டோர் மொபைல் விளக்குகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர்
கோவை
பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு SDPI கட்சி சார்பில் கோவை உக்கடம் பகுதியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆங்காங்கே மதக் கலவரங்கள் எழுந்தன. இந்த நிகழ்வு நடைபெற்று இன்றோடு (டிச.6) 32 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில், உக்கடம் பேருந்து நிலையம் அருகில் SDPI கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர்களிடம் பேசிய SDPI மாநில பொதுச் செயலாளர் ஏ.கே.கரீம் கூறுகையில், SDPI கட்சி சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினத்தை பாசிச எதிர்ப்பு தினம் என்று முழங்கி ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருவதாக கூறினார். பாபர் பள்ளியினுடைய தீர்ப்பு, தீர்ப்பாகதான் வந்திருக்கிறதே தவிர நியாயமாக இல்லை என்பதுதான் ஒவ்வொரு இந்திய இஸ்லாமியர்களுடைய கருத்து என்றும் கூறினார். வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ மத்திய மாநில அரசுகள் முறையாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தப் போராட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார். நீதி நிலைபெறும் வரை SDPI கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்றும் அவர் கூறினார்.
இந்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மொபைல் விளக்குகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.