வலங்கைமான் தேர்வுநிலை பேரூராட்சியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.65 கோடி மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் இறப்பின் சதவீதமும் அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இங்கு நவீன எரிவாயு தகனம் மேடை அமைக்க வேண்டும் என பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க.தனித்தமிழ் மாறன் மற்றும் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை அடுத்து அப்பகுதியில் விருப்பாட்சிபுரம்- தில்லையம்பூர் சாலையின் அருகே குடமுருட்டி ஆறு தென் கரையில் பேரூராட்சி சார்பில் முன்னதாக மயான கொட்டகை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் 2023- 24- ஆம் நிதி ஆண்டில் நவீன எரிவாயு தகன மேடை ரூபாய் 1.65 கோடி மதிப்பில் கட்டுமான பணி துவங்கப்பட்டு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவு பெற்று மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்குப் பின்பு எரிவாயு தகன மேடையில் வலங்கைமான் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளது. சமத்துவ தகன மேடை வலங்கைமான் பேரூராட்சியில் ஜாதிக்கு ஒரு சுடுகாடு, இடுகாடு என தனித்தனியாக உள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகளும் இருந்து வருகிறது. இந்நிலையில் அனைவரும் சமத்துவமாக பயன்படுத்தக்கூடிய நவீன எரிவாயு தகன மேடை கலைஞர் நகர் புற மேம்பாடு திட்டத்தின் மூலமாக கட்டப்பட்டு வருவது அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது.