திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவ கிராம மக்கள் தூண்டில் வளைவு கேட்டு போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக அரசு ரூபாய் 58 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் கேட்ட தூண்டில் வளைவிற்கு பதிலாக தூண்டில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்தும் தங்கள் கோரிக்கையின்படி தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தியும் கடந்த 25 நாட்களாக அமலி நகர் மீனவ மக்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக சார்பில் அவர்களின் போராட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் நேரில் சென்று ஆதரவளித்ததோடு நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம் பகவத் ஐஏஎஸ் அவர்களை நேரில் சந்தித்து அமலி நகர் மீனவ மக்களின் கோரிக்கை படி அமலி நகர் கடற்கரை வடக்கு கடைசி பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார். இந்நிகழ்வின் போது அதிமுக அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் இரா. ஹென்றி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான வழக்கறிஞர் பிரபு, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், தூத்துக்குடி கிழக்கு பகுதி செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சேவியர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல்ராஜ், சாம்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.