21ஆண்டுகால வழக்கு துறையூரில் மக்கள் நீதிமன்றத்தில் சமரச தீர்வு
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 21 ஆண்டுகாளாக நடைபெற்ற வழக்குக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டது.
மாண்புமிகு உச்ச நீதிமன்றம் புதுடெல்லி தேசிய மக்கள் நீதிமன்றம் உத்தரவின்படி தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படியும் மாவட்ட சட்டப்பணிகள் குழுவின் ஆலோசனைப்படி இன்று 14/12/2024 காலை துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமாகிய எம்.ஜெய்சங்கர் தலைமையில் துறையூர் சார்பு நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அதில் துறையூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர். சத்தியமூர்த்தி மற்றும், குற்றவியல் நீதித்துறை நடுவர் நர்மதா ராணி ஆகியோரின் முன்னிலையில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து சமரசமாக பேசப்பட்டது. சுமார் 300 வழக்குகளுக்கு மேல் கோப்பிற்கு எடுக்கப்பட்டு 169 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது. வங்கி வாராக்கடன்கள் 101 வழக்குகள் முடிக்கப்பட்டது.சமரச தீர்வு மொத்த வழக்கு 270, தொகையாக ரூபாய் 2,14,82,072 தீர்வு காணப்பட்டது. குறிப்பாக கடந்த 21 ஆண்டுகளாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ஒரு வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பாக சமரச முறையில் தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நீதிமன்றத்தில் துறையூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் உத்திராபதி , செயலாளர் சசி, அரசு வழக்கறிஞர் சந்திரமோகன், அரசு கூடுதல் வழக்கறிஞர் சபாபதி, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜெயராஜ் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்களும் வழக்காடிகளும் கலந்து கொண்டு வழக்குகளை சமரச முறையில் நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்ட சட்ட பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் செய்திருந்தார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்