பெரம்பலூர்.தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் பிரதி மாதம் மூன்றாவது புதன் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜனவரி-2025 மாதம் மூன்றாவது புதன்கிழமை “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி குன்னம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நடத்தப்பட வேண்டும். 15.01.2025 புதன்கிழமை அன்று பொங்கல் திருநாள் மற்றும் அதனைத் தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வந்தமையால் ஜனவரி-2025 மாதத்தின் நான்காவது புதன்கிழமை 22.01.2025 அன்று ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாமானது நடைபெறவுள்ளது.
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் (எதிர்வரும் 22.01.2025 புதன்கிழமை அன்று) பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறவுள்ளனர். எனவே, குன்னம் வட்டத்திற்குட்பட்ட கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும், மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.