நெய்வேலி என்எல்சி நிறுவனம் நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடலூர் அருகே ஸ்டாலின் அரசை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதலாவது விரிவாக்க சுரங்கத்திற்கு அருகாமையில் உள்ள வானதிராயரம் கிராமத்தில், சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களையும், வீடுகளையும் ஏற்கனவே என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்திய நிலையில், உரிய இழப்பீடும், வேலைவாய்ப்பும் தராமல் ஏமாற்றி வருகிறது.
இந்நிலையில் அக்கிராமத்தில் உள்ள 52 நபர்களுக்கு, என்எல்சி நிறுவனத்தில் வேலை வழங்கியுள்ளதாகவும், அவர்களின் நிலத்தை நில அளவீடு செய்வதற்காக, அதிகாரிகள் நாளை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், நில அளவீடு செய்ய விடமாட்டோம் என்றும், நிலத்தை கையகப்படுத்த விடமாட்டோம் என்றும், அக்கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், அக்கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும், ஸ்டாலின் அரசின் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.