கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்றி, நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி தரம் பிரிக்கப்படுகிறது. பல லட்சம் டன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த குப்பை கிடங்கை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்றி, நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தினர் வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் சிறுவர், சிறுமியர் முகத்தில் மாஸ்க் அணிந்தவாறு கலந்து கொண்டனர். வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்றி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து பேசிய தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் விக்னேஷ் ,கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதுவரை குப்பை கிடங்கை அகற்ற எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த குப்பை கிடங்கால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட வருகின்றனர். ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக தமிழக அரசு வெள்ளலூர் குப்பை கிடங்கை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தளபதி உத்தரவின் பேரில் மாவட்ட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக நேரடியாக தளபதியே கோவைக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார். அதே போல் வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்றக்கோரி பெருந்திரளாக தொண்டர்கள், பொதுமக்களுடன் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.