வலங்கைமான் வரதராஜன் பேட்டை பொது சுகாதார வளாகத்தில் தினசரி தேவையான தண்ணீர் வசதியுடன் “டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு ” செய்தி எதிரொலியாக தூய்மை பணியினை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு சீரமைப்பு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக ஆலயத்திற்கு எதிராக வலங்கைமான் பேரூராட்சியின் சார்பில் பொது சுகாதார வளாகம் உள்ளது.
இந்த பொது சுகாதார வளாகம் பழுதடைந்த நிலையில் பல மாதங்களாக பூட்டியே கிடந்தது. மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி மாதத்தில் புகழ் பெற்ற பாடைக் காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி வலங்கைமான் பேரூராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டம் 2.0, 2024- 2025 இன் மூலம் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் கடந்த மார்ச் மாதம் திருவிழாவிற்கு முன்பாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
பயன்பாட்டிற்கு வந்து ஒரு மாத காலத்திலேயே போதுமான தண்ணீர் வசதி, தினசரி சரியான தூய்மை பணிகள் நடைபெறாத நிலையில் சுகாதார வளாகத்தை பக்தர்கள், பொதுமக்கள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து பொது சுகாதார வளாகத்தை பக்தர்கள், பொதுமக்கள் பயன்படுத்த ஏற்ற வகையில் சீரமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என கடந்த 09- ந்தேதி “டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு ” இல் படத்துடன் செய்தி வெளியானது.
அதனை அடுத்து பொது சுகாதார வளாகத்தில் தினசரி தேவையான தண்ணீர் வசதியுடன் தூய்மை பணியினை பேரூராட்சி நிர்வாகம் “டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு” செய்தி எதிரொலியாக மேற்கொண்டது. இது தொடர்பாக பக்தர்கள், பொதுமக்கள் கூறும் போது சுகாதார வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் மின் விளக்குகள் இருந்தும் அவை பயன்பாட்டில் இல்லை அதனையும் சீர் செய்து, வளாகத்தில் உள்ள வாளிகள் மற்றும் டப்பாக்கள் தூய்மை அற்ற நிலையில் உள்ளது. அதனையும் சீர் செய்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.