தென்காசி,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மனைவியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம் அருகேயுள்ள ராமநாதபுரம் மேலகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் முருகபெருமாள் (வயது 38). இவரது மனைவி மகாலட்சுமி (வயது 35). இவர்களுக்கு முத்துசெல்வம், செந்தில்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.முருகப்பெருமாள் லாரி டிரைவராக பணிபுரிந்துள்ளார்.
கடந்த 2 மாதமாக டிரைவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மகாலட்சுமி காளான் உற்பத்தி செய்யும் தொழில் பயிற்சி பெற்று வீட்டின் முன்பு கூரை அமைத்து காளான் உற்பத்தி தொழில் செய்து வந்துள்ளார். மேலும் அருகில் உள்ள பூலாங்குளம் என்ற கிராமத்தில் தையல் கடையும் அதனுடன் சேர்ந்து காய்கறி கடையும் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இத்தொழிலுக்காக இருவரும் கடன் அதிகமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மகாலட்சுமியின் செல்போனை முருகபெருமாள் பிடுங்கி உடைத்ததாக கூறப்படுகிறது. பிரச்சனையை அருகில் உள்ளவர்கள் சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில் இன்று காலை மகாலட்சுமி சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார் அப்பொழுது மீண்டும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த முருகப்பெருமாள் அரிவாளால் மகாலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் விரைந்து சென்று, மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகபெருமானை கைது செய்து விசாரரனை நடத்தி வருகிறார்கள்.