ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள நீராவி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு பள்ளியின் செயலாளர் கே. எஸ்.ராமர் தலைமை தாங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.சண்முகவேல், கமுதி காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னில வகித்தனர்.
இந்தப் பேரணி பள்ளியில் இருந்து தொடங்கி சந்தனமாரியம்மன் கோயில் வழியாக முத்தாலம்மன் கோயில் வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், காவல்துறையினர் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
போதையினால் ஏற்படும் தீமைகள், மாணவர்களின் எதிர்கால பாதிப்புகள் குறித்து போலீசார் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். பள்ளியின் போதை ஒழிப்பு சங்க இணைத்தலைவர் கே.வடிவேல் முருகன் வரவேற்றார். பேரணி ஒருங்கிணைப்பு பணிகளை பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எஸ்.நாகரத்தினம், சாரணர் இயக்க ஆசிரியர் என.சத்தியசீலன் செய்தனர். பள்ளியின் முதுகலை ஆசிரியர் பி.ரமேஷ் நன்றி கூறினார்.