ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அடைக்கலம் காத்த அம்மன் கோவிலில் வருடாந்திர புரட்டாசி மாத பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
முதலில் அம்மனுக்கு பால், பன்னீர், திரவிய பொடி, தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
பின்னர் நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம் வானவேடிக்கை, தப்பாட்டம், உறுமி மேளம் உள்ளிட்ட இசை வாத்தியங்களின் முழக்கத்துடன் சிறப்பாக நடைபெற்றது. பெண்கள் தலையில் முளைப்பாரிகளை சுமந்து பசும்பொன் கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் கோவிலுக்குச் சென்றனர்.அதன் பின்னர் அடைக்கலம் காத்த அம்மன் ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து, கோவில் முன்பாக முளைப்பாரிகளை இறக்கி வைத்து கும்மியடித்தனர்.
பின்னர் முளைப்பாரிகள் அருகிலுள்ள ஆற்றில் கரைக்கப்பட்டன. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு உயர்தர சைவ அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் 1000 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு ஆனந்தம் நிறைந்த பக்தி சூழலை ஏற்படுத்தினர்.