பெரம்பலூர்.அக்.07. ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வெங்கலம், வெண்பாவூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கிருஷ்ணாபுரம் ஜே.பி.எஸ் மஹாலிலும், குன்னம் வட்டத்திற்குட்பட்ட பரவாய், ஆண்டிக்குரும்பலூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பரவாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் நடைபெற்றது.
  இதில், வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் ஜே.பி.எஸ் மஹாலில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மனு அளிக்க வருகை தந்த பொதுமக்களிடம் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, இ-சேவை மையம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட 15 அரசுத்துறைகள் பங்கேற்று 46 வகையான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கிட ஏதுவாக ”உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.


இம்முகாமினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் , மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற  உறுப்பினர் ஆகியோர் பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர். முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என பார்வையிட்டு, பொதுமக்களை அவர்களின் கோரிக்கைக்கு தொடர்புடைய துறைகள் உள்ள அறைக்கு அழைத்துச் செல்ல மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வலர்கள் மூலமாக முறையாக வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றதா என்றும், பெறப்படும் மனுக்கள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றதா என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

பின்னர், பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில்  கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தினையும், வருவாய்த்துறை சார்பில், பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணை,  பிறப்பிடச் சான்றிதழ்களையும், வேளாண் பொறியியல் துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.4,11,600 மதிப்பிலான களை எடுக்கும் இயந்திரங்களையும் மானிய விலையிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்.
பட்டா மாற்றத்திற்கான ஆணைகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள், ” வழங்கப்பட்ட மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பட்டா மாற்றத்திற்கான ஆணை வழங்கியதால் மிகுந்த மகிழ்ச்சியுடன், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
 
இந்நிகழ்வில், அட்மா தலைவர் ஜெகதீசன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ்,  வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அசோக் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *