ஜி. டி. நாயுடு பெயரில் கோவையில் புதிய அடையாளம் : தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் மிக நீளமான சாலை மேம்பாலமாக மதுரை நத்தம் மேம்பாலம் சுமார் 7.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளது. அதனை மிஞ்சும் வகையில், கோவையில், அவிநாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோ மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டு உள்ளது.
இது இந்தியாவின் மூன்றாவது பெரிய தரை வழி பாலம் என்ற பெருமை பெற்று உள்ளது.
கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க குறைந்தது, 45 நிமிடங்கள் ஆகிறது. இந்த பாலம் திறக்கப்பட்டதால் 10 நிமிடங்களில் இந்த தூரத்தை கடக்கலாம். குறிப்பாக விமான நிலையம், கொடிசியா , ஹோப் காலேஜ், நவ இந்தியா, லட்சுமி மில்ஸ், அண்ணா சிலை மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய சந்திப்புகளில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.
எனவே கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. அதில் ஒரு ரயில்வே கிராசிங் வருகிறது. மேம்பாலத்திற்காக மொத்தம் சுமார் 4.90 ஏக்கர் நிலம் ரூபாய் 228 கோடி மதிப்பில் கையகப்படுத்தப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டுமானம் முன்னேற்பாடு பணி அதாவது ஃப்ரீ காஸ்ட் முறையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த மேம்பாலம் மூலம் நகரில் இருந்து விமான நிலையம் மட்டும் இன்றி சேலம், ஈரோடு, திருப்பூர், அவிநாசி ஆகிய பகுதிகளுக்கு இனி விரைவாக செல்ல முடியும். இந்த மேம்பாலத்தின் கோவை விமான நிலையம், ஹோப் காலேஜ், நவ இந்தியா மற்றும் அண்ணா சிலை என நான்கு இடங்களில் ஏறு தளம் மற்றும் இறங்கு தளம் அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த மேம்பாலத்தில் பாதுகாப்பு சுவர்கள், ரோலர் தடுப்புக் கருவிகள் உலகத் தரமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த மேம்பாலம் நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம் ஆகவும், ஆறு வழித்தடத்துடன் கூடிய விரிவுபடுத்தப்பட்ட தரை வழி சாலை என மொத்தம் பத்து வழி தடங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஜி.டி நாயுடு பெயர் சூட்டப்பட்டு, கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கோல்ட் வின்ஸ் பகுதியில் திறந்து வைத்தார்.
பின்னர் காரில் பயணித்த படி பாலத்தை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், ஜி.டி. நாயுடு கும்பத்தினர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து ஜிடி நாயுடுவின் மகன் ஜி۔டி۔கோபால் பேசுகையில்
அப்பா பெயர் வைத்து பாலம் திறந்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. எதிர்பாரதவிதமாக ஸ்டாலின் அவர்களே வைத்தது. கோவை மாநகரத்திற்கு இந்த பாலத்தால் ஆயிரம் வருடங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவிலே, கோவையில்தான் விமான நிலையத்தை 15 நிமிடங்களில் சென்றடைய முடியும். பெங்களூர், சென்னை , பாம்பே வில் விமானநிலையத்தில் எளிதில் சென்றடைய முடியாது. இந்த பாலம் கோவையின் பெருமை . நேரம் குறைவாவதோடு தொழில்முனைவோர்களுக்குப்பயனுள்ளதாக இருக்கும். மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது கோவையின் வளர்ச்சி அபாரமானதாக இருப்பதாக தெரிவித்தார்.