பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்
தங்கம்தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு , போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அருங்காட்சியக ஆணையர் அரவிந்த், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தினை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையின் சார்பாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்து இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களை நேரடியாக பார்வையிட்டுள்ளார்கள்.
அதன் தொடர்ச்சியாக உலக புகழ் வாய்ந்த கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெறக் கூடிய இந்த அகழாய்வுப் பணிகள் இந்த கோவிலினுடைய முக்கியத்துவம், குறிப்பாக சோழப் பெருவேந்தர்களில் தனக்கென மிகப்பெரிய இடத்தினை பிடித்த மாமன்னன் இராஜேந்திர சோழனுடைய பெருமையை பறைசாற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தரத்திலான ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு செய்திருந்தார்கள்.
மேலும், இந்த அருங்காட்சியகம் எங்கே அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதற்கான அந்த இடத்தை தேர்வு செய்யும் பொருட்டு இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் அருகில் உள்ள இடத்தினையும், குருவாலப்பர்கோவில் அருகே உள்ள மற்றொரு இடத்தினையும் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களில் எந்த இடம் மிகவும் சிறப்பாக இருக்கும், அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்பதை முடிவு செய்து பணிகள் துவங்கப்படும்.
இந்த திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நேரடியாக ஆய்வு செய்யக்கூடிய தனித்துவமான திட்டங்களில் வரக்கூடிய ஒன்றாகும். இத்திட்டத்தின் முக்கியத்துவம் கருதி மிக விரைவில் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களை கவரக்கூடிய வகையில், சிறந்த முறையில், உலகத் தரத்தில் இந்த அருங்காட்சியகம் அமைய வேண்டும். மேலும், இது சோழர்களின் புகழை குறிப்பாக இராஜேந்திர சோழனுடைய புகழை பறைசாற்றும் வகையிலும், கங்கைகொண்ட சோழபுரத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையிலும் அமையவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார் என மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் தெரிவித்தார்.
பின்னர், மாளிகைமேடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பின்னர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு பொருட்களின் விவரம் குறித்து கேட்டறிந்தும், தொடர்ந்து உட்கோட்டை பகுதியில் நடைபெறும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட மதில்சுவருக்கு நிறுத்தப்பட்டதாக கருதப்படும் 7 மீ நீளம், 72 செ.மீ அகலமுடைய கல்தூணினை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் அகழாய்வு பணிகள் இணை இயக்குநர் சிவானந்தம், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், அகழாய்வு பணிகள் இயக்குநர் பிரபாகரன், துணை இயக்குநர் பாக்கியலெட்சுமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், உட்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி குமார் , சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.