கோவையில் நலம் யோகா மையம் மற்றும் இண்டர்நேஷனல் யூத் யோகா ஃபெடரேஷன் ஆகியோர் இணைந்து தென்னிந்திய அளவிலான யோகா போட்டி நடைபெற்றது…
கோவையில் சர்வதேச யோகா போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தேர்வு போட்டிகள் கோவை சரவணம்பட்டி நலம் யோகா மையம் மற்றும் இண்டர்நேஷனல் யூத் யோகா ஃபெடரேஷன் ஆகியோர் சார்பாக நடைபெற்றது.
இந்த போட்டியில் ஆனைமலை,கருமத்தம் பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள்,ஓசோன் மற்றும் கமலி யோகா மையங்களில் பயிற்சி பெற்று வருபவர்கள் என சுமார் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஐந்து வயது முதல் ஐம்பத்து ஐந்து வயது வரையிலான போட்டியாளர்களுக்கு சப் ஜூனியர்,ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில், ஆர்ட்டிஸ்டிக், ரிதமிக், அத்லெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
நலம் யோகா மைய நிறுவனர் ராஜேஷ் குமார் ஒருங்கிணைப்பில் இதில்,விருட்சாசனம்,கூர்மாசனம், மயூர் ஆசனம், திருவிக்கிரமா ஆசனம், சிரசாசனம்,சக்ராசனம்,என பல்வேறு ஆசனங்களை செய்து மாணவ,மாணவிகள் அசத்தினர்..
தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு இண்டர்நேஷனல் யூத் யோகா ஃபெடரேஷன் தலைவர் ஆறுமுகம்,ஓசோன் யோகா மையம் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்..
இதில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் தாய்லாந்து மற்றும் காசியில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.