கவிதைக் களஞ்சியம் !
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 100. மின்னஞ்சல் vanathipathippagam@gmail.com
பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களின் 100 வது நூல் இது .அளப்பரிய சாதனை .100 நூல்கள் எழுதுவது எல்லோராலும் இயலாத ஒன்று .இவருடைய குரு மு .வ. அவர்கள் கூட . 100 நூல்கள்எழுதவில்லை குருவை மிஞ்சிய சீடராக வளர்ந்துள்ளார்கள் .மு .வ. அவர்கள் இருந்திருந்தால் தன் சீடரின் சாதனை கண்டு மனம் மகிழ்ந்து இருப்பார்கள் .வானதி பதிப்பகத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது .

பாராட்டுக்கள் .பல பதிப்பகங்கள் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களின் நூலை வெளியிட்டு இருந்தாலும் 100 வது நூலை வெளியிட்டப் பெருமையை வானதி பதிப்பகம் பெற்றுக் கொண்டு விட்டது .முகப்பு அட்டை ,உள்அச்சு ,வடிவமைப்பு என யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .
தமிழ்க்கனல் முடியரசன் தொடங்கி மலேசியா கவிஞர் செ .சீனி நைனா முகமது வரை 20 கவிஞர்களின் கவிதை நூல்களை படித்து மலரில் இருந்து தேன் எடுப்பது போல கவிதைகளில் பிடித்த வரிகளை மேற்கோள் காட்டி ,20 கட்டுரைகள் வடித்துள்ளார்கள் .

பாராட்டுக்கள் .பிரபலமான கவிஞர் ,வளரும் கவிஞர் என்ற பாகுபாடு இன்றி சம நிலையில் எழுதியுள்ள மிகச் சரியான பாராட்டுப் பத்திரமாக உள்ளன.
.நடிகர்களின் 100 வது படம் போல மிகச் சிறப்பாக வந்துள்ளது .20 மிகச் சிறந்த ஆளுமை மிக்க கவிஞர்களின் ஆகச் சிறந்த படைப்புகளில் இருந்து வைர வரிகளை மேற்கோள் காட்டி ,கட்டுரை வடித்து இலக்கிய மகுடம் சூட்டி உள்ளார்கள் .
மறைந்த கவிஞர்கள் உவமை கவிஞர் சுரதா ,மீரா போன்ற கவிஞர்களுக்கு கட்டுரையில் புகழ் மாலையும் ,வாழும் கவிஞர்களுக்கு வாழும் காலத்திலேயே சிறப்புச் செய்யும் விதமாக கட்டுரைகள் உள்ளன .ஒரு படைப்பாளிக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் வராத மகிழ்ச்சி ,தன் படைப்புப் பாராட்டப் படும் பொழுது வரும் .படைப்பாளி அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .என் படைப்பை நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் பாராட்டியபோது நான் அடைந்த மகிழ்ச்சியை இந்த நூலில் இடம் பெற்றுள்ள 20 கவிஞர்களும் அடைவார்கள் என்பது உறுதி .ஒரு படைப்பாளிக்கு தன்னுடைய படைப்புப் பாராட்டப்படுவதுதான் உச்சப் பட்ச மகிழ்ச்சி .அதனை ஒரே நூலில் 20 கவிஞர்களுக்கு வழங்கி உள்ளார்கள் .
.”தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ” என்ற பொதுநோக்கில் “தான் படித்துப் பெற்ற இன்பம் வாசகர்களும் பெறவேண்டும் .”என்ற பொது நோக்கில் இலக்கிய விருந்து வைத்து உள்ளார்கள் .20 கவிஞர்களின் 10 நூல்கள் வீதம் 200 நூல்கள் படித்த உணர்வைத் தரும் உன்னத நூல் .20 கவிஞர்களின் அனைத்து நூல்களையும் படிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காத ஒன்று .நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு மட்டுமே கிடைத்த அறிய வாய்ப்பு .கவிஞர்கள் கவிதை எழுதும் போது பார்க்காத பார்வையும் ,விமர்சகர்கள் பார்ப்பார்கள் என்பது .உண்மை .
நூல் ஆசிரியர் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள வைர வரிகளில் எனக்கு மிகவும் படித்த வரிகளை மட்டும் இங்கே பதச் சோறாக ரசனைக்கு எழுதி உள்ளேன் .
1.தமிழ்க்கனல் முடியரசன் .
வீட்டை நினைப்பது சிறுநேரம் – மனைவி
வேட்கை இருப்பது சிறுநேரம் .
நாட்டை நினைப்பது நெடுநேரம் .- கவிதை
நயந்து தொடுப்பது நெடுநேரம் ..
2.உவமைக் கவிஞர் சுரதா .
படுத்திருக்கும் வினாக்குறிபோல்
மீசை வைத்த
பாண்டியர்கள் வளர்த்தமொழி !
3.குக்கூ கவிஞர் மீரா .
விழும்போதெல்லாம்
மீசையில் மண் ஒட்டவேண்டும் .
இந்தச் செம்மண்
ஏனெனில் எம்மண் !
4.அப்துல் ரகுமான் .தமிழுக்குக் கிடைத்த கலீல் ஜிப்ரான் . ஆழமாகச் சிந்தியுங்கள் !
புதுமையாகச் சொல்ல்லுங்கள் !
கவிதையில் உங்கள்
கையொப்பம் இருக்கிறதா ?
என்று பார்த்துக் கொள்ளுங்கள் .
5.அங்கதக் கவிஞர் தமிழன்பன் .
சிலம்பை
உடைத்து என்ன பயன் ?
அரியணையிலும் அந்தக் கொல்லன் !

  1. திரையுலகின் காளிதாசன் வாலி .
    எங்களால்
    மனிதர்களை மந்திரிகளாக்க
    முடிகிறது !
    மந்திரிகளைத்தான் மறுபடியும்
    மனிதர்களாக்க முடிவதில்லை !
    7.மு .மேத்தாவின் கவிப்பார்வை .
    கம்பன் காவியத்தில் வாலி வதை !
    கண்ணே நீ செய்வது வாலிப வதை !
    நியாய விலைக் கடையில் நிற்பது போல !
    நிற்க வைத்தாய் என் ஆசைகளை !
    8.பாலாவின் கவிதைப்பாங்கு .
    மண் ஓர் அதிசயம்
    விழுந்தால் பிறப்பு !
    வீழ்ந்தால் இறப்பு !
    இடையே
    அதனைத் தொட்டுக் கொண்டே
    வாழ்வது தான் வாழ்க்கை !
    9.தனித் தன்மைக் கவிஞர் தாரா பாரதி .
    கிழக்கோடு கை குலுக்கு !
    மேற்கோடு புன்னகைசெய் !
    வடக்கோடு சேர்ந்து நட !
    தெற்கொடு கூடி உண் !
    10.கந்தகக் கவிஞர் கந்தர்வன் !
    புரட்சி என்பது
    பிள்ளை பிடிப்பது போல்
    கொடுமையல்ல !
    பிள்ளை பெறுவது போல்
    புனிதமானது !
  2. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் .
    கறந்தால் பசுபால் தரும் என்கிறான் !
    காகம் இவன் வடையை எடுத்தால்
    காகம் வடையைத் திருடிற்று
    என்கிறான் இப்படியாக மனிதன் !
    12.தன்மானக் கவிஞர் முத்துலிங்கம் .
    கங்கையம்மா வைகைம்மா !
    கழனி செழிக்ககும் பொன்னியம்மா !
    உங்களுக்குள் சண்டை வந்தா
    ஒருமைப்பாடு பிழைக்காது ! ஏலேலோ !
    13.இலட்சியக் கவிஞர் வெ .இறையன்பு இ.ஆ .ப .
    மற்றநாட்டினர்
    செவ்வாய்க்கும் , புதனுக்கும் ,வியாழனுக்கும்
    செல்ல ஆயத்தமாகி விட்டார்கள் !
    நாம் மட்டும் சாதியை ஆராந்துகொண்டு
    சனியிலேயே இருக்கிறோம் !
    14.பத்மாவதி தாயுமானவர் .அர்த்த நாரீசுவர ஆளுமை ! கண்ணே கண்ணகி !
    கதவைச் சாத்திக்கொள் !
    கவனமாயிரு !
    மாதவி வீடு வரை
    போய்வந்து விடுகிறேன் !
    15.ஆற்றல்சால் கவிஞர் தங்கம் மூர்த்தி .
    கலவரத்தில்
    வீடுகள் எரிந்தன
    பீனிக்சாய்
    சாதிகள் !
    16.வித்தியாசம் +தனித்துவம் = வெற்றிச்செல்வன் .
    என்ன படித்து என்ன
    மனதை
    அலங்கரிக்க தெரியாமல் !
    17.ஹைக்கூ கவிஞர் மு .முருகேஷ் .
    சிரித்துதான்
    மறக்க வேண்டியுள்ளது
    பசியை !
    18.வாழ்க்கையிலே கவிதைகளைத் தேடும் கவிஞர் க . ஆனந்த் .
    வரலாறு என்பது
    வந்து போனவர்களின் கணக்கல்ல !
    தந்து போனவர்களின் கணக்கு !
    19.கவிதை அப்பா கண்ணீர் வரைந்த ஓவியம் கண்மணி செல்மா ( கவிஞர் மீராவின் மகள் )
    எல்லா இடங்களிலும்
    தேடிப் பார்த்தாகி விட்டது !
    எல்லா மனிதருள்ளும்
    வலை வீசியாயிற்று !
    உங்களைப் போல் ஒருவர்
    என் கண்ணில் படவேயில்லை !
    .20.மலேசிய நாட்டின் மதிப்புறு கவிஞர் செ .சீனி நைனா முகமது .
    தமிழினம் எய்திய பெரும்பேறு – அது
    தாய்மொழி தமிழ் எனும் அரும்பேறு !
    செம்மொழி யாவினும் செம்மொழி எம்மொழி
    செந்தமிழ் தானடியோ !
    இந்த நூலில் மலை போல கவிதைகள் உள்ளது .சிறு மடு மட்டுமே நான் எழுதி உள்ளேன் .கவிதை மாமலையை ரசிக்க நூல் வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள் .100 நூல்கள் எழுதி சாதனைப் படைத்துள்ள நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *