நீலகிரி
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பல்லடம் தாலுக்கா செய்தியாளர் மீது நேற்றிரவு மர்மம் கும்பல் அறிவாளால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நீலகிரி மாவட்ட அனைத்து செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் நேச பிரபு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் காமநாயக்கன்பாளையம் பகுதியில் தனது வீட்டிலிருந்து நேசபிரபுவை 24-01-2024 அன்று பிற்பகல் முதலே பதிவெண் இல்லாத இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து நேசபிரபு காவல்துறையினருக்கு தனது செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் செய்தியாளர் நேசபிரபு வீட்டிலிருந்து வெளியே வந்த நேரம் பார்த்து அவரை மர்ம கும்பல் அங்குள்ள பெட்ரோல் பங்கில் வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த நேசபிரபு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பியோடிய கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், உண்மையை உலகிற்கு எடுத்துச் செல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத் துறை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.