எர்ரம்பட்டி கிராமத்தில் விநாயகர் முத்தாலம்மன் காளியம்மன் அய்யனார் அம்மாச்சியம்மன் மடைக் கருப்பு திருக்கோவில் வருடாபிஷேக விழா
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் முத்தாலம்மன் காளியம்மன் அய்யனார் திருக்கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாள் யாக வேள்வி பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் யாக வேள்விகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் காலை மங்கல இசை முழங்க மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ராமேஸ்வரம், அழகர்கோவில், காசி, கங்கை, உள்ளிட்ட திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் யாகசாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானத்தில் வட்டமிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு
வருடபிஷேக விழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களான கோட்டை கருப்பு, ஹனுமந்த பெருமாள், குருநாதன், குட்டகருப்பு, வடுகபரச்சி, மஞ்சமலை, அணக்கரை, ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து வருடபிஷேக விழாவிற்கு வருகை தந்த சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை எர்ரம்பட்டி கிராம நாட்டாமை கிராம கரைகாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்..