( வி.தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரி)
புதுச்சேரி அரசு, பொதுப்பணித்துறை மூலம் பழைய துறைமுக வளாகத்தில் கட்டப்பட்ட கலாச்சார மையம் மற்றும் நகர்ப்புற பொழுதுபோக்கு மையத் திறப்பு விழா நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மையங்களைத் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் N. ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் R. செல்வம், பொதுப்பணி அமைச்சர் க. லட்சுமி நாராயணன், வேளாண் அமைச்சர் க. ஜெயக்குமார், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் KSP ரமேஷ், திரு AKD ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மையங்களைத் திறந்து வைத்து துணைநிலை ஆளுநர் ஆற்றிய உரையின் சுருக்கம்.
புதுச்சேரி, சுற்றுலாத்துறையின் மூலம் சுமார் ரூ. 2.7 கோடியில் கட்டப்பட்டுள்ள கலாச்சார மையம் மற்றும் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் நகர்ப்புற பொழுதுபோக்கு மையம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த பொழுதுபோக்கு மையம் நிச்சயம் புதுச்சேரிக்கு ஒரு புதுப்பொலிவை தரும். இங்கே கைவினைப் பொருட்காட்சி சமீபத்தில் நடந்தது. அதில் கிட்டத்தட்ட 11 லட்சம் பேர் பொருட்காட்சியைப் பார்வையிட்டிருக்கிறார்கள் என்பது மிகப் பெரிய சாதனை.
இது போன்று பல நிகழ்வுகளை நடைபெறும் இடமாக இந்த இடம் திகழும். இங்கு கழிப்பறைகள், பல மக்கள் கூடுவதற்கு இடவசதி, தங்களது மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொள்வதற்கான இடமாகவும் இது திகழ்கிறது.
இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் பொலிவுறு நகரத் திட்ட அதிகாரிகளுக்கும் மற்றும் அரசுக்கும் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.