எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே ரூ3 லட்சம் மதிப்பிலான, விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2350 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள், 110 லிட்டர் புதுச்சேரி சாராயம் பறிமுதல் . பெண் கைது.
மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி லாமேக் மேற்பார்வையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயா, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ், தலைமை காவலர் சிவக்குமார், காவலர்கள் ராஜசேகர், ரகுராமன் மற்றும் போலீசார் குழுவினர் சீர்காழி அருகே அளக்குடி பில்படுகை கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி,திடீர் சோதனை செய்தனர். அப்போது 180 மி.லி, 90 மி.லி. அளவுக் கொண்ட புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் 2350 எண்ணிக்கையிலும், புதுச்சேரி சாராயம் 110 லிட்டரும் வீட்டில் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார், மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குமுதவல்லி என்ற பெண்ணையும் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய நபரை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட மதுபானங்களில் மொத்த மதிப்பு ரூபாய் 3 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். சீர்காழி பகுதியில் புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் போலீசாரின் அதிரடி சோதனையால் அதிகளவு கைப்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது