வலங்கைமான் பகுதியில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு உறுதிப்படுத்த மகளிர் ரங்ககோலி கோலமிட்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் விநியோகம்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஹரித்துவார மங்கலம் மற்றும் மேல விடையல் ஆகிய பகுதிகளில் 100% வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்ககோலி மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இந்தியாவின் 18 ஆவது லோக்சபா தேர்தல் ஏழு கட்டமாக நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக தமிழகத்துக்கு ஏப்ரல் 19 இல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெடுப்பு பணிகளை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர் கையெழுத்து இயக்கம், கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரங்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக 29. நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி, 169. நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, வலங்கைமான் அருகே உள்ள ஹரித்து வாரமங்கலம், மேல விடையல் ஆகிய ஊராட்சிகளில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி மகளிர் குழுவினர் மூலம் ரங்ககோலி கோலமிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இதில் வலங்கைமான் தாசில்தார் ரசியா பேகம், தேர்தல் துணை தாசில்தார் ரவி, மண்டல துணை தாசில்தார் ஆனந்தன், மகளிர் சுய உதவிக்குழு வட்டார மேலாளர் தனலட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.