எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி சட்டை நாதர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்.நான்கு ஆண்டுகளுக்கு பிறகு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் கொரோனா காலம் மற்றும் திருப்பணியின் காரணமாக கடந்த நான்கு ஆண்களுக்கு பிறகு பக்தர்களுடன் வெகு விமர்சையாக சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு ரிஷப லக்னத்தில் கோவில் வசந்த மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் ஓத, தருமபுரம் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சட்டைநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் பால், சந்தனம், பன்னீர், இளநீர், தயிர் மற்றும் வாசனை திரவியப் பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீப ஆராதனை காட்டினர்.
பின்னர் சித்திரை பெருவிழா ரிஷப கொடி ஏற்றப்பட்டு மகாதீபஆராதனை காண்பிக்கப்பட்டது . அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் நமசிவாய கோஷமிட்டு மலர் தூவி கொடியேற்றத்தை கண்டு தரிசனம் செய்தனர். சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான உமையம்மை திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கி, இறைவனுடன் காட்சி அளிக்கும் திருமுலைப்பால் விழா நாளை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.