தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் ஏப்ரல் 25- மாற்றுத்திறனாளிகளுக்கான உகந்த உலகத்தை ஏற்படுத்த வேண்டும். மற்றவர்கள் போல் அவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதை பொது மக்களுக்கு வலியுறுத்தும் வகையில் தஞ்சாவூரில் பேரணி நடந்தது.
காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இயங்கி வரும் சத்யா மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளி சார்பில் நடந்த பேரணிக்கு தலைமை பயிற்சியாளர் விஜயா சந்திரசேகர் தலைமை தாங்கினார். பேரணியை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் ஃபெடரேஷன் ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி, அனைத்திந்திய சட்ட உரிமைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில் மாநிலத் தலைவர் சாலமன் இன்பராஜ் தஞ்சை மாவட்ட தலைவர் வெங்கட்ராமன் பொருளாளர் மணிகண்டன் மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயமேரி, குழந்தைகள் நல மருத்துவர் கிருத்திகா ஆகியோர் பேரணியாக வந்து மாற்றுத்திறனாளிகளை ஒதுக்குதல் கூடாது,
அவர்களை வீட்டிலேயே அடைத்து வைத்தல் கூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கான உகந்த உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு சரியான முறையில் அரவணைப்பை அளிக்க வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு கோஷங்கள் பேரணியில் எழுப்பப்பட்டது.
பின்னர் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சத்யா மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளி ஒருங்கிணைப்பாளர் சரவணன் செய்திருந்தார்.