செங்குன்றம் செய்தியாளர்
சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 க்குட்பட்ட 24 வது வார்டு அண்ணா நினைவு நகரில் தனியாருக்கு சொந்தமான வண்ண மீன் வளர்ப்பு பண்ணை உள்ளது. இந்தப் பண்ணையில் நீர் தேக்க தொட்டிகள் அமைத்து அதில் தண்ணீரை நிரப்பி வண்ண மீன்களை வளர்ப்பது வழக்கம் .
அந்தப் பண்ணையில் அங்கு ஏற்கனவே நான்கு ஆழ்துளை கிணறுகள் இருப்பதாக கூறப்படுகிறது . நேற்று இரவு 11 மணி அளவில் அவ்விடத்தில் மேலும் ஒரு ஆழ்துளை கிணறு அமைக்க வாகனத்துடன் பணியாளர்கள் அங்கு வந்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த இடத்தில் இதுபோல் நீங்கள் ஆழ்துளை கிணறுகள் அதிகமாக போட்டு வைத்துள்ளீர்கள் இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புகள் இருப்பதாகவும் இங்கு சுமார் 500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் இருப்பதால் நாங்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகும் என வண்ண மீன் வளர்ப்பு தொழிலாளர்களிடம் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்கள்..
அதற்கு அவர்கள் செவி சாய்க்காமல் போர் வெல் பணிகளை ஆரம்பித்ததால் இதுகுறித்து மாமன்ற உறுப்பினர் சேட்டுவிடம்
தகவல் அளித்தனர் அங்கு வந்த மாமன்ற உறுப்பினர் சேட்டு , ஆலன் மோகன் காந்தி இன்பராஜ் , சாம்ராஜ் உட்பட அப்பகுதி பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் சாலை சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாசிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நாளை காலை புகார் கொடுங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியதின் பேரில் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் கைவிடப்பட்டு மக்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.