மதுரையில் சிக்னலுக்காக நின்ற ரயிலில் பெண் கார்டை தாக்கி பணம், நகை பறிக்க முயற்சி……
நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, வட மாநிலங்களில் இருந்து தென் மாவட்டம் வந்த துணை ராணுவத்தினர் வடமாநில தேர்தல் பணிக்காக திரும்பி சென்றனர்.
அவர்களை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று காலி பெட்டிகளுடன் நேற்று நெல்லைக்கு சென்று கொண்டிருந்தது. மாலை 3.45 மணிக்கு இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கான சிக்னலுக்காக தத்தனேரி பகுதியில் காத்து நின்று கொண்டிருந்தது.
இந்த ரயிலில் ஓடும் ரயில் மேலாளராக (கார்டு) கேரளாவைச் சேர்ந்த பெண்ணான ராக்கி என்பவர் பணியில்இருந்தார். தத்தனேரியில் நின்றிருந்த ரயிலில் ஏறிய 3 பேர் கொண்ட கும்பல், பணியில் இருந்த ராக்கியி டம் பணம், நகை கேட்டு மிரட்டியுள்ளனர்.
பின்னர் அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயற்சி செய்துள்ளனர் இதனை அவர் தடுத்ததால், ஆத்திரத்தில், அவரது தலையில் கத்தியால் குத்தினர். இதற்கிடையே சிக்னல் கிடைத்து, ரயில் புறப் பட்டதால் மர்ம நபர்கள் ரயிலில் இருந்து குதித்து தப்பினர். மதுரை ரயில் நிலையம் வந்த பிறகு, ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் நடந்தவை குறித்து கார்டு ராக்கி தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இது தொடர்பாக மதுரை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
இப்பகுதியில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தை டி.ஆர்.இ.யூ போன்ற ரயில்வே தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.